திருப்பதி செல்லும் பஸ் டிக்கெட்டில் ஜெருசலேம் யாத்திரை மற்றும் ஹஜ் யாத்திரை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது…!
இந்துக்கள் புனித யாத்திரையாக மேற்கொள்ளும் திருப்பதி செல்லும் அரசு பஸ் டிக்கெட்டில் பிற மதம் குறித்து விளம்பரம் செய்துள்ளது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என்று ஆந்திரா பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்துக்கள் யாத்திரை செல்லும் அரசு பஸ்ஸில் இந்துக்களின் யாத்திரை குறித்து ஏன் விளம்பரம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர் பாஜக.,வினர்.
ஏற்கெனவே அமெரிக்க நிகழ்ச்சி ஒன்றில் குத்து விளக்கு ஏற்றுமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை வற்புறுத்திய போதும், விளக்கு ஏற்ற மறுத்து விட்டார் ஜெகன் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.! இந்நிலையில் திருப்பதி அரசு பஸ் டிக்கெட் விவகாரம் ஆந்திர மாநிலத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
கிறிஸ்துவர்களின் ஜெருசலேம் யாத்திரை செய்வதற்கான விளம்பரம் செய்யப் பட்டுள்ள ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (ஏபிஎஸ்ஆர்டிசி) பஸ் டிக்கெட் படம் சமூகத் தளங்களில் வைரலாகியுள்ளது. இதை கிறிஸ்தவ பிரச்சாரம் என்று கூறும் பாஜக, இதுபோன்ற செயல்களை ஊக்குவித்ததற்காக ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது.
இந்துக்களின் புனிதத் தலமான, கோயில் நகரமான திருப்பதிக்குச் செல்லும் பேருந்துகளின் டிக்கெட்டுகளில் இந்து அல்லாத விளம்பரங்களை அச்சிடுவது திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) மற்றும் ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி ஆகியவற்றின் அலட்சியப் போக்கு மட்டுமல்ல, உள்நோக்கம் கொண்டதும் கூட என்று இந்து ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் லங்கா தினகர் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் என்பது இந்துக்களின் பெருமை! இங்கே நடப்பதைக் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல. வரி செலுத்துவோரின் பணத்தில் செய்யப் பட்டுள்ள இந்த “கவனக்குறைவான செயல்” மற்ற மத மிஷனரிகளுக்கு மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்றம் மேற்கொள்ள ஊக்கத்தையும் பிரசார தளத்தையும் வழங்குவதாகத்தான் அமைகிறது… என்றார்.
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டியின் மாமா ஒய்.வி.சுப்பா ரெட்டி திருமலை ஸ்ரீவேங்கடேஸ்வரர் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (டி.டி.டி) தலைவராக நியமிக்கப் பட்டு உள்ளார்.
ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்.எஸ்.ஆர்.சி.பி) மூத்த தலைவரான சுப்பா ரெட்டி, டி.டி.டி அறக்கட்டளையின் 50 வது தலைவராக உள்ளார்! டி.டி.டி அறக்கட்டளை வாரிய தலைவரான சுப்பா ரெட்டி குறித்த செய்தி வெளியானபோது, சமூக ஊடகங்கள் சுப்பா ரெட்டி ஒரு பயபக்தியுள்ள முழுநேர கிறிஸ்துவர் என்று கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்தன.
ஆனால் அவரோ அப்போது, தன்னைப் பற்றிய அவதூறு பிரசாரம் இது என்று மறுத்தார். நான் பிறப்பால் இந்து, சாகும் போதும் இந்துவாகவே சாவேன் என்றார். இந்தக் குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரான பிரசாரம் தான்! இவை என்னை ஆழமாக காயப்படுத்தியது என்று ஓர் உள்ளூர் ஊடக சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தான் ஒவ்வோர் ஆண்டும் சபரிமலைக்குச் செல்வதாகவும், அடிக்கடி ஷீர்டிக்கு செல்வதாகவும் கூறினார். எனக்கு எதிராக பிரசாரம் செய்பவர்கள், எனது ஹைதராபாத், மற்றும் ஓங்கோலில் உள்ள எனது இல்லங்களுக்குச் சென்று எந்த வகையான சடங்குகளை நாங்கள் செய்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்கள் என்று கூறினார்.
அது போல், ஜெகன் மோகன் ரெட்டியும், கடந்த 2012 ஆம் ஆண்டில், வேங்கடேஸ்வரர் கோவிலுக்குள் நுழைந்தபோது, வேங்கடேசப் பெருமாள் மீதுள்ள நம்பிக்கையைக் குறிப்பிடும் ரெஜிஸ்டர் புத்தகத்தில் கையெழுத்திடாமல் சென்றார். கேட்டபோது, அதற்காக ஆத்திரமடைந்து திட்டித் தீர்த்தார். இந்துக்கள் அல்லாதவர்கள் ஆலயத்தில் நுழையும் போது இந்த ரிஜிஸ்டரில் கையெழுத்திட்டுச் செல்வது கட்டாயம். ஆனால் தாம் ஏற்கெனவே 2009இல் கோவிலுக்கு வந்த போது செய்ததைப் போல இப்போதும் கையெழுத்திட வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டார் ஜெகன் மோகன்.
ஜெகன் மோகனின் தந்தை, ராஜசேகர ரெட்டி, திருப்பதியின் ஏழு மலைகளில் இரண்டு மலையை கிறிஸ்துவர்களுக்கு தாரை வார்க்க முனைந்தார். ஆனால் அதே திருப்பதி மலைகளினூடே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இப்போது ஜெகன் மோகன் தனது கிறிஸ்துவ மத வெறியை திருப்பதியில் புகுத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவ்வாறு அவர் முயன்றால், ஏற்கெனவே தோற்றுப் போய் வீட்டில் அமரக் கூட முடியாமல் தள்ளாடி வரும் சந்திரபாபு நாயுடுவின் கதிதான் ஜெகனுக்கும் ஏற்படும் என்று திருப்பதி பெருமாள் மீதுள்ள நம்பிக்கையாளர்கள் கோபத்துடன் சாபம் இடுகின்றனர்.