சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கேரளாவில் வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சாலைகள் சீரமைப்பு, மின்மாற்றிகள் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கண்ணூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியும் மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு விழாவும் கடந்த சனிக்கிழமை நடந்தது.
இந்த விழாவில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு பேசியதுடன் நிவாரண உதவிகளை வழங்கினர்.
அப்பொழுது 60 வயது பெண்மணி ஒருவர் திடீரென மேடைக்கு வந்து அமைச்சர்களுடன் கை குலுக்கினார். அப்படியே முதல்வர் பினராயி விஜயனுடன் கைகுலுக்கினார். பின்னர் திடீரென முதல்வரின் கையை விடாமல் குலுக்கிகொண்டிருந்தார். “உங்களை போன்ற ஆட்களை விட மாட்டேன், ஒருவரையும் விட மாட்டேன்” என கூறி கையை திருகினார். இதனால் கோபம் அடைந்த பினராயி விஜயன் கையை உதறிவிட்டு கீழே போய் உட்காருங்க என கோபமாக கூறினார்.
உடனே அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்த பெண்மணியை அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மூதாட்டி கண்ணூர் அருகே தளிப்பறம்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் காவல்துறைக்கு தெரியவந்தது.
முதல்வர் கையை பெண்ம்ணி பிடித்து திருகும் இந்த விடியோ வைரலாகி வருகிறது.