வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ஓபிஎஸ் ஏன் விமான நிலையம் வரவில்லைஎன அதிமுகவினர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.
அதிமுக தொண்டர்கள் மத்தியில், அம்மா கைகாட்டியவர் என்ற அடையாளம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு உண்டு. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் என்றும், ஆட்சியில் துணை முதல்வர் என்றும் தொடர்ந்து வருகிறார் ஓபிஎஸ்.
இருப்பினும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தன்னை ஒரு தலைவராக வெளிப்படுத்தி முன்னின்று வருகிறார். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசியவர்கள், ஆதரவாளர்கள் என்று இனம் காணப் பட்டவர்களும் அதிமுக.,வில் ஒதுங்கிப் போயுள்ள சூழல் நிலவுகிறது.
கடந்த பத்து நாட்களாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது முதல்வர் பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்கவில்லை. இது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றனர். அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வரை வரவேற்க வருவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அவர் விமான நிலையம் வராமல் போனது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு தொண்டர்கள் மாலைகளை அணிவித்து, மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். முதல்வரிடம் செய்தியாளர்கள் அவரது பயணம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், அரசு முறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது என்று கூறினார். மேலும், சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் உள்ளதாகவும், கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளதாகவும் கூறினார்.
கிங்ஸ் மருத்துவமனை கிளை சென்னைக்கு வர ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது; வெளிநாடு வாழ் தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே என்னும் திட்டம் துவங்கப் பட்டுள்ளது! 40 க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என்று கூறிய அவர், புதிய திட்டங்கள் மூலம் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எரிச்சல், பொறாமையால் தான் எதிர்ப்புக் குரல் வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனம் குறித்து பதில் அளித்தார் எடப்பாடி.
மேலும், வெளிநாடு வாழ் தமிழர்களின் வரவேற்பு மகிழ்சியை தந்தது என்று கூறிய அவர், தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டுவதாகவும், அரசு முறைப் பயணம் மேலும் தொடரும் என்றும் கூறினார்.