தமிழை காக்க பாடுபடுவேன் என்று மு.க.ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கும்போது, திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்குக் கூட தமிழில் பெயர் சூட்டுவதில்லை என்று துரை முருகன் கூறியிருக்கிறார். இதனை – சபாஷ்…. சரியான போட்டி என்று தனது டிவிட்டர் பதிவில் கிண்டல் அடித்திருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.
திமுக., தலைவராக இருந்தவர் மு.கருணாநிதி. திமுக.,வில் தலைவராக இருந்த அண்ணாதுரைக்கு அடுத்து, அடித்துப் பிடித்து, சில பல குயுக்திகளைக் கையாண்டு, நியாயமாக தலைவர்களாக வேண்டியவர்களை எல்லாம் ஓரங்கட்டி, தானே அடுத்த தலைவராக முடி சூட்டிக் கொண்டார். அவரும் தன் பெயரை தட்சிணாமூர்த்தி என்ற வடமொழிப் பெயரில் இருந்து, கருணா நிதி என்ற வடமொழிப் பெயருக்கு மாற்றிக் கொண்டார்.
பின்னர் அடுத்த தலைமுறை திமுக., பட்டத்துக்கு தன் மகன் ஸ்டாலினை கொண்டு வந்தார். அவரது பெயரும் தமிழ்ப் பெயராக வைக்கவில்லை. கருணா நிதிக்குப் பின்னர், ‘நிதி’ என்பது, வட நாட்டவர்கள் வைத்துக் கொள்வது போல், அவரது குடும்பத்தின் குலப் பெயர் ஆனது. தயாநிதி, கலாநிதி என்று அடுத்த கட்ட உறவினர்களுக்கும் பெயர் சூட்டப் பட்டது. உதயநிதி, தயாநிதி என்று அடுத்த கட்ட வாரிசுகளுக்கும் ‘நிதி’ திரட்டி வைத்தார் கருணாநிதி.
இந்நிலையில், திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை என்று நூல் வெளியீட்டு விழா ஒன்றில் ஆதங்கப்பட்டார் திமுக பொருளாளர் துரைமுருகன்! இது, கருணாநிதியைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி என்றும், அவர் இல்லாத நிலையில், சமாதிக்குக் கேட்கும் வகையில் துரை முருகன் கேட்டிருப்பதாகவும் விமர்சிக்கின்றனர் சமூகத் தளங்களில்!
மேலும், அனைத்து ஓட்டல்களிலும் வட மாநிலத்தவர் பணியில் இருப்பதால் எந்த மொழியும் கற்றுக்கொள்ளலாம் என்றார் துரை முருகன்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியனின் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்ற நூல் வெளியீட்டு விழாவில்தான் இது போன்ற கருத்தை உதிர்த்தார் துரை முருகன்.
இந்த விழாவில் வீரமணி, ஆ.ராசா, சுப வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவர்களை எல்லாம் உடன் வைத்துக் கொண்டு, இந்த விழாவில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தற்போது, திமுகவினர் வீடுகளிலே கூட தமிழில் பெயர் வைப்பதில்லை என்று ஆதங்கப் பட்டுக் கொண்டார்.
ஓட்டல்களில் வட இந்தியர்களே அதிகமாக வேலை செய்வதாகவும் அவர்களுக்கு ஹிந்தியில் பேசினால் மட்டுமே புரிவதாகவும் கூறிய துரைமுருகன், அதனால் எந்த மொழியும் கற்றுக் கொள்ளலாம் என்றார்.
தமிழகத்தில் இருக்கும் ஓட்டல்களில் போய் சாப்பிடுவதற்குக் கூட ஹிந்தி கற்க வேண்டிய மோசமான சூழலுக்கு தமிழகம் தள்ளப் பட்டிருக்கிறது. ஓட்டல்களில் போய் வேலை செய்ய தமிழர்கள் இல்லையா அல்லது ஓட்டல்களில் ஹிந்திக்காரர்களை மட்டுமே வேலைக்கு சேர்க்கிறார்களா என்ற கேள்வி அங்கிருந்தவர்களுக்கு எழுந்தது.
மேலும், வழக்கம் போல் ஆங்கிலேயருக்கு சாமரம் வீசும் திராவிட கலாசாரத்தின் கொத்தடிமைத்தனத்தை வெளிப்படுத்திய துரை முருகன், இங்கு வெள்ளையர்கள் வரவில்லை என்றால் சோமாலியா மக்கள் போல் இருந்திருப்போம் என்றும், வெள்ளையர்கள் தான் ஜனநாயகத்தை சொல்லிக் கொடுத்தவர்கள் என்றும் கூறினார், பரம்பரை முதலாளிகளின் குடும்பக் கட்சியான திமுக.,வின் பொருளாளர் துரைமுருகன்.