சினிமாவில் கதைகளுக்கு நடித்துவிட்டு, ஏதோ சில விசிலடிச்சான் குஞ்சுகளின் கைத்தட்டலைப் பெற்றுவிட்டு, சந்தோசப் பட்டு திருப்தி அடையவேண்டிய நடிகர்கள், இனி தாங்கள் தான் மாஸ் காட்டி, வருங்காலத்தில் தமிழகத்தையே ஆளப் போகிறோம் என்ற நினைப்பில், அரசியல் பேசி நடிப்பதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அரசியல் பேச்சை உதிர்ப்பதும் எத்தகைய சிக்கல்களைத் தரும் என்பதை விஜய் உணர்ந்திருப்பார்.
நடிகர்கள் அரசியல் பேசத் தொடங்குவதால், அவர்கள் நடிக்கும் படங்கள் தான் முதலில் சிக்கலை சந்திக்கின்றன. தற்போது நடிகர்கள் வருங்கால முதல்வர் கனவில் அரசியல் வசனங்களை உதிர்ப்பதால், அது ஆளும் வர்க்கத்துக்கு கொதிப்பைத் தருகிறது. குறிப்பாக, தமிழக அரசியல் களத்தில் இது சற்று அதிரடியாக உள்ளது.
நடிகர் விஜய், தனக்கு அரசியலில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளும் அதிமுக.,வை எதிர்த்து அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவார். அவருக்குப் பின்னணியில் உதயநிதியை தம் அடுத்த கட்டத் தலைவராக முன்னிறுத்தும் திமுக.,வின் ஆதரவு இருந்து கொண்டிருக்கும்.
தற்போது விஜய் நடித்து வெளிவர உள்ள ‘பிகில்’ பட இசைவெளியீட்டு விழாவில் அவர் பேசிய அரசியல் கருத்துகளால் முதல் சிக்கல் தொடங்கியுள்ளது
பிகில் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பேச்சு, ஆளும் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் சிலர் விஜய்யை நேரடியாகவே கடுமையாக விமர்சித்தனர். கவுண்டமணி கூட கட்சி தொடங்கலாம் என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார் அமைச்சர் ஒருவர்.
இந்நிலையில் பிகில் இசை விழா நடைபெற்ற தாம்பரம் தனியார் கல்லூரிக்கு, எதன் அடிப்படையில் அனுமதி கொடுத்தார்கள் என்று விளக்கம் கேட்டு உயர்கல்வித் துறை செயலாளர் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு எதன் அடிப்படையில் கல்லூரி அனுமதி கொடுத்தது? என்று, தாம்பரம் தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, உயர்கல்வித்துறை செயலாளர் அதிரடி காட்டியுள்ளார். இது பிள்ளையார் சுழியா, இன்னும் தொடருமா இந்த அதிரடி என்று சினிமா வட்டாரத்தில் கிலி கிளம்பியுள்ளது.