சென்னை:
சென்னையை சேர்ந்த கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.சேகர் ரெட்டியின் சென்னை வீடு, அலுவலகங்கள், காட்பாடி வீடு ஆகியவற்றிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று 3வது நாள் சோதனையில் சேகர் ரெட்டி காரில் ரூ.24 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இவை அனைத்துமே புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்பதும் அதிர்ச்சியின் உச்சம். நாட்டு மக்கள் பணமின்றி தவிக்கும் நிலையில், வங்கி அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொண்டு இந்த சதிச் செயலை அவர் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த தரகர்கள் மூலமாக தம்மிடம் இருந்த ரூ80 கோடி பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை புதிய ரூ2,000 நோட்டுகளாக மாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார் சேகர் ரெட்டி.
இன்று 3 வது நாளாக சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அதில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் மேலும் 40 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நடத்தப்பட்ட சோதனைகளில் 167 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.