சங்ககிரியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்காக தமிழக அரசு என்ன செய்தது என திமுக தலைவர் ஸ்டாலின் எழுப்பி கேள்விக்கும் முதல்வர் பதிலளித்தார்.
சங்ககிரியில் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை துவக்கி வைத்து பேசிய முதல்வர் பழனிசாமி, மக்கள் பிரச்சனைகளை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்பதற்காகவே சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு கண்டு வருகிறோம். சரியான மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களுக்கு அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்படும்.
நீர்மேலாண்மை திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெங்கு தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும். தமிழக அரசு விவசாயிகள் பிரச்னையை தீர்க்க என்ன செய்தது என எதிர்க்கட்சி தலைவர் கேள்வி கேட்கிறார். தமிழக அரசு விவசாயம் மட்டுமின்றி அதன் சார்பு தொழில் முன்னேற்றத்திற்கும் அனைத்து உதவிகளையும் செய்கிறது.
விளைபொருள் விலை குறைவால் ஏற்படும் இழப்பீட்டிலிருந்து காக்க கடனுதவி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நதிநீர் பிரச்னை பற்றி பேசும் ஸ்டாலின், திமுக 4ஆட்சி காலத்தின் போது எந்த விவசாய பிரச்னையை தீர்த்தார்.
திமுக ஆட்சி காலத்தில் அக்கட்சியின் பொருளாளரான துரைமுருகன் தனது சொந்த தொகுதியில் உள்ள பாலாறு பிரச்னையை கூட தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக அரசை விமர்சிக்கும் தகுதி திமுக.,வுக்கு இல்லை. ஐ.நா., சபையில் தமிழை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடியை தமிழக மக்கள் அனைவரும் போற்ற வேண்டும் என்றார்