காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நெசவு தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கதரின் பயன்பாடு சுதேசியின் அடித்தளமாகும்” என்ற அண்ணல் காந்தியடிகளின் வரிகளை நினைவில் கொண்டு அன்னாரின் பிறந்தநாளான அந்நன்னாளில், கதர் ஆடைகளை நெசவு செய்யும் ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேன்மையுற, மக்கள் அதிக அளவில் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டும்.
கைராட்டைகளைக் கொண்டு நெசவு செய்யப்படும் கதர் ரகங்களை தயாரிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மக்களின் மனதை கவரும் வண்ணம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் தமிழ்நாட்டிலுள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், ஏழை, எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளையும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தி, அவர்தம் வாழ்வு சிறக்க உதவிட வேண்டுமென, நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வேண்டுகோள்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) October 1, 2019
"ஏழை எளிய நெசவாளர்களால் தயாரிக்கப்படும் கதர் ஆடைகளை அனைவரும் வாங்கி பயன்படுத்தி அவர்தம் வாழ்வு சிறக்க உதவ வேண்டும்."
நெசவுத் தொழிலுக்கு கைகொடுப்போம்!
நெசவாளர்களின் நிலை உயர கதராடைகளை அணிந்திடுவோம்! pic.twitter.com/XvatAuFgvG