விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியதாவது:
மு.க.ஸ்டாலின் திண்ணை பிரசாரம் செய்து வருகிறாராம்.. அவர் ஆட்சியில் இருந்த போது இது போல திண்ணை பிரசாரம் செய்து மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்தினார்களா? இல்லையே.. நான் முதல்வரானது ஒரு விபத்து என போகிற இடம் எல்லாம் ஸ்டாலின் பேசி வருகிறார்.
அதேபோல் அதிமுகவை பற்றி பல பொய்யான தகவல்களையும் ஸ்டாலின் கூறி வருகிறார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இந்த ஆட்சி கலைந்துவிடும் என தினந்தோறும் கூறிவந்தார்.
அதிமுகவை உடைக்க, எம்.எல்.ஏக்களை வளைக்க எவ்வளவோ முயற்சிகள், சதிகள் செய்தார். ஆனால் 2 ஆண்டுகள் 8 மாதங்கள் எந்த பிரச்சனையும் மக்கள் நலனில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். இது எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கம். இதை யாராலும் அசைத்து பார்க்க முடியாது.
நானும் ஸ்டாலினும் ஒரே நேரத்தில் எம்.எல்.ஏக்களானோம். அவரது தந்தை திமுகவின் தலைவரானார். அதனால் அவர் மறைவுக்குப் பின்னர் திமுகவின் தலைவராகிவிட்டார் ஸ்டாலின். அவர் திமுக தலைவரானதுதான் விபத்து.
அதிமுகவில் அப்படி அல்ல.. அதிமுக நிர்வாகிகள் அனைவரும் உழைப்பால் உயர்ந்தவர்கள். திமுகவால் இனி மேல் ஆட்சிக்கு வரவே முடியாது. அக்கட்சித் தலைவர் ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏவாக கூட வெற்றி பெற முடியாது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.