சென்னை:
சசிகலா தலைமையில் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதியேற்பது என்று அதிமுக., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு இன்று (டிச. 29 ம் தேதி) கூடியது . சென்னை வானகரத்தில் உள்ள வெங்கடாஜலபதி மண்டபத்தில் காலை 9. 30 மணியளவில் துவங்கியது. இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலாவின் எதிர்ப்பாளர்கள் யாருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படவில்லை.
இதனிடையே ‛அ.தி.மு.க.,வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார்,” என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார். வானகரத்தில் அவர் நிருபர்களிடம் பேசியபோது,
அ.தி.மு.க.,வின் பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கட்சி சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தகவலை சசிகலாவிடம் தெரிவித்து, அவரது சம்மதத்தை பெற நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.
சசிகலா பொதுச் செயலர்:
அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், ஐந்தாவதாக, கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழுவின், ஐந்தாவது தீர்மானம் வருமாறு:
கட்சியின் பொதுச் செயலாளராகவும், தொண்டர்களின் தாயாகவும், தவ வாழ்வு வாழ்ந்த தலைவியை இழந்து கட்சி இன்று கலங்கி நிற்கிறது.கட்சியை இனி யார் வழி நடத்தி செல்வது என்ற நிலை ஏற்பட்ட போது, ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களிலும் சசிகலாவின் பெயர் தான் எழுந்தது. கட்சியை வழி நடத்தி செல்ல தேவையான நடவடிக்கைகளை எடுப்பது; கொள்கைகளை வகுப்பது; கட்சியின் அன்றாட செலவுகளுக்கு வங்கி கணக்குகளை இயக்க, பொருளாளருக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் அனைத்து செயல்பாடுகளையும் ஏற்று நடத்த அதிகாரம் வழங்குவது ஆகிய பணிகளுக்காக கட்சியின் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுவது மிகவும் இன்றியமையாத பணியாக தற்போது இருக்கிறது. அதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சியின் சட்ட திட்ட விதி -19, பிரிவு -8 ல் பொதுக்குழுவிற்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் சட்ட திட்ட விதி – 20, பிரிவு – 2ன் படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதுவரை, சசிகலாவையே கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து இந்த பொதுக்குழு ஒருமனதாக தீர்மானம்நிறைவேற்றுகிறது.