புதுச்சேரியில் நடந்த காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நூதனமான முறையில் காங்கிரஸ் 5000 ரூபாய் ஓட்டுக்குப் பணம் கொடுத்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளோடு நேற்று புதுச்சேரியின் காமராஜ் நகருக்கும் நேற்று இடைத்தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் மற்றும் அதிமுக ஆகியக் கட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது..
ஆனால் 5000 ரூபாயைக் கையில் கொடுக்காமல் வினோதமான முறையில் காங்கிரஸ் விநியோகித்துள்ளது. அந்தத் தொகுதிக்குட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டத்தில் வாக்குச் சாவடி அருகே காங்கிரஸ்கார்கள் வாக்களர்களுக்கு ஒரு சாய்பாபா டோக்கனை கொடுத்துள்ளனர். அந்த டோக்கன் மூலம் 5000 ரூபாய்க்கான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரி மன்சூர் தலைமையிலான அதிகாரிகள், அப்பகுதியில் இருந்த சலூனில் சோதனை செய்தனர். அப்போது சாய்பாபா படம் அச்சிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட டோக்கன்கள், வாக்காளர் பட்டியல், காங்கிரஸ் கட்சிக் கொடி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் டோக்கன் வைத்து இருந்த 3 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் 5000 ரூபாய்க்கான டோக்கன் வழங்கியதாக எதிர்ச்கட்சிகள் புகாரையடுத்து 4 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.