spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு: ஸ்டாலின்!

சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு: ஸ்டாலின்!

- Advertisement -

சுர்ஜித் வீட்டிற்கு சென்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மீட்பு பணி பற்றி மேலும் அவர் அனைவரையும் ஏக்கத்திலும், மீள முடியாத துக்கத்திலும் விட்டு விட்டு அந்தோ! -அந்த அரும்பு சுஜித் நம்மை விட்டு பிரிந்து விட்டதே என்று நினைக்கும் போது என் இதயம் கனக்கிறது. ‘எப்படியும் உயிருடன் மீட்டுவிடுவார்கள்’ என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில் அந்தக் குழந்தை மாண்டு விட்டதாக நள்ளிரவிற்குப் பிறகு வெளிவந்த அறிவிப்பு, இடி போல் இதயத்தைத் தாக்கி என்னை நிலை குலைய வைத்து விட்டது.

குழந்தையின் பெற்றோருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே வழி தெரியாமல் தவித்து நிற்கிறேன். தமிழக மக்களும் – அனைத்து தாய்மார்களும், ‘சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும்’ என்ற ஒரே குரலாக ஒலித்தனர். நல்ல செய்தி கிடைக்கும் என்று தங்கள் நிமிடங்களைக் கழித்துக் கொண்டிருந்த நேரத்தில், சுஜித்தை மீட்பதில் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் அதிமுக அரசு தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்தும் வேதனையடைந்தனர்.

எத்தனை தோல்விகள்? எத்தனை தடுமாற்றம்?- ஒன்றா இரண்டா பட்டியலிட! அக்டோபர் 25 ஆம் தேதி மாலையில் இருந்து 28ஆம் தேதி நள்ளிரவு வரை எத்தனை எத்தனை திடுக்கிடும் செய்திகள்! தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தாமதமாகவே வந்தனர். தெளிந்த முடிவின்றி பரிட்சார்த்த நடவடிக்கைகளை ஒன்றன் பின் ஒன்றாக மேற்கொண்டனர். மீட்பு நடவடிக்கை குறித்து அனுபவம் வாய்ந்தவர்களை அழைத்துப் பேசி ஒரு வியூகம் வகுக்கப்படவில்லை.

சில அமைச்சர்கள் சம்பவ இடத்தில் நின்று கொண்டு அவரவர்களுக்கு மனதில் உதித்ததைக் கூறிக்கொண்டு, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதிலே முழுக் கவனம் செலுத்த இயலாது அவர்களது பணிகளில் குறுக்கிட்டுக் கொண்டிருந்ததையும் தொலைக்காட்சிகளின் நேரலை நிகழ்ச்சிகளில் காண முடிந்தது. இவ்வாறு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க கிடைத்த நேரங்கள் எல்லாம் மொத்தமாக வீணடிக்கப்பட்டது கண்கூடு!

ஆழ்துளை கிணறுகள் போடுவதில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் 13-க்கும் மேற்பட்ட கட்டளைகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமாக “பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை அடியிலிருந்து மேல் மட்டம் வரை மூடிட வேண்டும்” என்று தெளிவாக கூறியுள்ளது. இழப்பீடு கேட்டு சிவகாமி என்பவர் தொடர்ந்த ஒரு வழக்கில் “பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை” மூடுவதற்கு ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அதிமுக அரசு எழுத்து பூர்வமான வாக்குமூலத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இது குறித்து பஞ்சாயத்து சட்டம் திருத்தப்பட்டு- தனியாக ஆழ்துளை கிணறுகளை மூடுவது குறித்து அரசு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் இவை அத்தனையும் அதிமுக ஆட்சியில் கானல் நீராக மாறி – இன்றைக்கு அறியா குழந்தை சுஜித் உயிரை காவு வாங்கி விட்டது.

பேரிடர் மேலாண்மையில் மாநில அளவில் பேரிடர் மேலாண்மைக்கு முதலமைச்சர் தலைவர் என்றாலும், மாவட்ட அளவில் அங்குள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராக இருப்பார். அவருடன் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் துணை தலைவராக இருப்பார் என்று தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கூறுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை திட்டமிட்டு நடத்தவில்லை. ஆகவே அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் தலைமையில் உள்ள “மாநில பேரிடர் ஆணையம்” மட்டுமல்ல- மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உள்ள “மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையமும்” படு தோல்வியடைந்து இன்றைக்கு பச்சைக்குழுந்தை சுஜித்தை பறிகொடுத்து தவிக்கிறோம்.

80 மணி நேரம் மீட்பு பணி என்று அமைச்சர்கள் தங்களை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தினார்கள். அது மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளின் சுதந்திரத்தை பறித்தது. தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மண் வகை பாறையா அல்லது கடினப்பாறையா என்றெல்லாம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் தனியாக வரை படம் இருக்கிறது. ஏன் முதலமைச்சரின் பொதுப்பணித்துறையின் கீழ் வரும் நிலத்தடி நீர் துறையின் கீழே கூட இது போன்ற தகவல்கள் நிச்சயம் இருக்கும்.

ஆனால் திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி மண் வகை பாறையா அல்லது கடினப் பாறையா என்று தெரிந்து கொள்ளவே அதிமுக ஆட்சி மூன்று நாட்கள் போராடியிருக்கிறது. இதனால் முதல் ரிக், இரண்டாவது ரிக் என்று ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்த பிறகு புதிய முயற்சியில் இறங்கி- இறுதியில் ஓடி விளையாட வேண்டிய சின்னஞ்சிறு சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு.

பேரிடரில் ஒரு குடிமகனைக் காப்பாற்ற வேண்டியது அரசின் முதல் கடமை. இந்த தோல்விக்கு என்ன காரணம்? தொழில் நுட்ப அணுகுமுறையில் தமிழகம் பின்தங்கியுள்ளதா? திட்டமிட்டு செயல்படுவதில்- மீட்பு பணிகளில் ஈடுபடுவதில் தமிழக அரசு இன்னும் முழுமையான அனுபவம் பெறவில்லையா? சுஜித்தை மீட்க ராணுவம் அல்லது துணை ராணுவத்தை ஏன் முன்கூட்டியே அழைக்கவில்லை?

ஒரு சுஜித்தை காப்பாற்ற முடியாத அதிமுக ஆட்சியினர் பேரிடர் நேரங்களில் எப்படி தமிழக மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? என்று கேட்க விரும்புகிறேன். இதுவரை மாநிலம் மற்றும் மாவட்ட ரீதியாக “பேரிடர் மேலாண்மை திட்டங்கள்” தயாரிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? பேரிடர் பணிகளை செய்வதற்கு நவீன தொழில் நுட்ப ரீதியாக உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளதா? இல்லையா? பேரிடர் நிதி எல்லாம் எதற்காக செலவிடப்படுகிறது? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

ஆகவே தாங்கமுடியாத – துயரமான சுஜித்தின் மரணம் தமிழகத்தில் முதலும் கடைசியுமாக இருக்கட்டும். இனியொரு நிகழ்வு இப்படி தமிழகத்தில் அறவே நடக்கக் கூடாது. இனியாவது – எஞ்சியிருக்கின்ற நாட்களில் அதிமுக அரசு விழித்தெழ வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள பயன்படாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக கண்டறிந்து – அவற்றை அடியிலிருந்து மேல்மட்டம் வரை மூடிடவும் அல்லது மழைநீர் சேகரிப்பு ஆதாரமாக மாற்றிட வேண்டும்.

பயன்பாட்டில் உள்ள போர்வெல் கிணறுகளைச் சுற்றி தடுப்புச் சுவர் அல்லது வேலி அமைத்திட வேண்டும். போர்வெல் விவரங்கள் அடங்கிய பதிவேடுகள் கிராமப் பஞ்சாயத்து வாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதிமுக அரசை மட்டும் நம்பி பயனில்லை என்பதால் ஆங்காங்கே உள்ள கழகத் தோழர்கள் “பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள்”,

“பாதுகாப்பற்ற முறையில் உள்ள ஆழ்துளை கிணறுகள்” போன்றவற்றின் தகவல்களை சேகரித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு அளித்து – அவற்றை மூடுவதற்கும், தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாநில பேரிடர் ஆணையம் மற்றும் மாவட்ட பேரிடர் ஆணையங்கள் செயல்படுவதற்கு தேவையான நவீன தொழில் நுட்ப வசதிகளை ஒரு போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்திடவும், மாவட்ட அளவில் உள்ள பேரிடர் ஆணையங்களிள் மக்கள் பிரதிநிதிகள் இடம்பெற்றிடவும் அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe