சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு அவசர சட்டம் குறித்து விளக்கம் அளித்து கொண்டு இருந்த போது, மூன்று மர்ம நபர்கள் மறுத்து பேசி, போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாமல் தடுத்தனர்’ என காங்கேயம் இன மாடுகள் ஆராய்ச்சி மைய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தன் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ஜன., 19ம் தேதி மாலை, சென்னை மெரினாவில் கூடியிருந்த பேராட்டக்காரர்களிடம் பேசினேன். அது, நேரடியாக, ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது எங்கள் முன் இருந்த கோரிக்கைகள், 1. மிருக வதை தடுப்பு சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும்2. அல்லது ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்3. அதுவும் முடியாவிட்டால், தமிழக எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
இதன்பிறகு, டில்லிக்கு புறப்பட்டோம். 20ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு டில்லி சென்றடைந்தோம். அங்கு, நான், ராஜசேகர் உள்ளிட்ட, 20 பேர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசினோம். காலை, 10:30 மணி முதல், 12:00 மணி வரை மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் தவேவை சந்தித்து பேசினோம்.
அப்போது நாங்கள் முன் வைத்த கோரிக்கைகள்:1. இந்திய விலங்குகள் நல வாரியத்தை கலைக்க வேண்டும்2. இந்த வாரியம் குறித்து விசாரிக்க வேண்டும்3. மத்திய அரசு அல்லது மாநில அரசு மூலமாக, மிருக வதை தடுப்பு சட்டத்தை திருத்த வேண்டும் 4.அல்லது அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும்.
பின்னர், நாங்கள் அவரது அலுவலகத்திற்கு சென்றோம். அங்கு சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியத்தின் புதிய தலைவர் நிகி ஆகியோரை சந்தித்தோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக தாங்கள் தயாரித்து வைத்து இருந்த அறிக்கையை அவர்கள் கேட்டு பெற்றனர். பின், அதை வைத்து அவசர சட்டத்தை உருவாக்கினர்.
இதன் பின், மத்திய அமைச்சர் தவேவை மீண்டும் சந்தித்தோம். அப்போது, பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். அப்போது அவர், ‛ஒரு அமைப்பு சட்டத்தை மீறுகிறது அல்லது நாட்டிக்கு எதிராக சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் வேண்டும்’ என, கூறினார். உடனே நாங்கள்,‛ பீட்டா அமைப்பு, 13 மாநிலங்களில், நாட்டு கால்நடைகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது’ என, கூறினோம்.
இந்த புகாரை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி, விசாரிக்க சொல்வதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து நாங்கள், ‛ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல கலாச்சார நிகழ்வுகளுக்கு தடைகள் பெற அந்த அமைப்பு ஏராளமாக செலவு செய்கிறது’ எனவும் குறிப்பிட்டோம். மேலும், ‛ அன்னிய முதலீடு முறைப்படுத்தும் சட்டத்தின் வாயிலாக விசாரிக்க வேண்டும்’ என்றோம். அப்போது அவர் பிரதமர் மோடியுடன் பேசினார். ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என பிரதமர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
அடுத்த நாள், டில்லி நிருபர்களை சந்தித்து, பிராணிகள் நல அமைப்புகள், இந்தியாவின் நாட்டு கால்நடைகளை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை தெரிவித்தோம். இதை கேட்டு, டில்லி நிருபர்கள் ஆச்சரியப்பட்டனர். அன்று இரவு சென்னை திரும்பி, இரவு 9:00 மணிக்கு மெரினாவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை சந்தித்து பேசினோம். டில்லியில் நடந்த விஷயங்களை எடுத்து கூறினோம். இனிமேல் என்ன செய்யலாம்? என அவர்களிடம் கேட்டோம். போராட்டக்காரர்களில், 99.9 சதவீதம் பேர், ‛ நீங்க சொல்லுங்க அண்ணா…’ என்று கூறினர்.
அதற்கு நான், ‛ இந்த போராட்டத்திற்கு நான் ஏற்பாடு செய்யவில்லை. எனினும், அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற நம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மிருக வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசுக்கு நாம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்றேன். அங்கிருந்த இளம் பெண் ஒருவர், ‛ சார், அரசை நாம் நம்ப முடியுமா?’ என, கேள்வி எழுப்பினார்.அதற்கு நான், ‛பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்களுக்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும்’ என, தெரிவித்தேன். இதன் பின்னர் போராட்டக்காரர்கள் அமைதியாக அங்கிருந்து கலைந்து செல்ல இருந்தனர். ஆனால், மூன்று மர்ம நபர்கள் திடீரென பிரச்னை எழுப்பினர்.
அதில் ஒருவர், தன்னை ஒரு மூத்த வழக்கறிஞர் என்று கூறிகொண்டு, தீவிரமாக பேசி போராட்டக்காரர்களை உணர்ச்சிவசப்பட வைத்தார். இரண்டாவது நபர், ‛ நாம் போக தான் வேண்டுமா; அரசியல்வாதிகளை நம்ப வேண்டுமா?’ என்று பேசி அங்கிருந்தவர்களை குழப்பி விட்டார்.
நாங்கள் கூறிய எதையும் அந்த மூன்று நபர்கள் ஏற்க மறுத்து விட்டனர். எங்களிடம் இருந்த மைக்கை பெறுவதில் குறியாக இருந்தனர். இதன் பிறகு, ஜல்லிக்கட்டு பிரச்னையை விட்டு விட்டு பிற பிரச்னைகள் மீது கவனம் செலுத்த தொடங்கினர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல கூடாது என்பதில், 10 பேர் மட்டுமே தீவிர கவனத்துடன் இருந்தனர்.
எனவே, அங்கிருந்து கனத்த இதயத்துடன் வெளியேறினோம். தமிழகத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரலாற்றுபூர்வமான மாணவர் போராட்டம் அப்போதே தோல்வியில் முடிந்து விட்டது.
இவ்வாறு கார்த்திகேய சிவசேனாதிபதி முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.