மும்பை:மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிராவின் 18வது முதல்வராகவும், சிவசேனாவில் இருந்து 3 வது முதல்வராகவும் ஆகியுள்ளார்.
மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்தப் பதவி ஏற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்தினார்.
இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, திமுக தலைவர் ஸ்டாலின், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்னவிஸ், அஜித்பவார், சகஜ்புஜ்பால், பிரபுல் படேல், ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அம்பானி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆயினும் சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை.
மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். பதவி ஏற்பு விழாவிற்காக பல்லாயிரம் பேர் திரண்டனர்.
முன்னதாக, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா பத்திரிகையின் ஆசிரியராக இருந்த உத்தவ் தாக்கரே, அந்த பணியில் இருந்து விலகினார். மஹாராஷ்டிர மாநில 18வது முதல்வராக இன்று அவர் பதவியேற்க இருந்த நிலையில், சாம்னா பத்திரிகை ஆசிரியர் பணியை சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இன்றைய சாம்னா நாளிதழில் பாஜக.,வை கடுமையாக விமர்சித்ததுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, தனது வழிகாட்டி என குறிப்பிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மஹாராஷ்டிராவின் பிரகாசமான எதிர்காலத்திற்காக, விடா முயற்சியுடன் உத்தவ் செயல்படுவார் என நான் நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.