சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் டி.எஸ்.அன்பு அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஐஜி அந்தஸ்தில் ஆறுமுகம் மட்டுமே இருந்தார். அவரது ஓய்வுக்குப் பின் ஏடிஜிபி அந்தஸ்துக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஐஜி அந்தஸ்தில் பொறுப்பு உருவாக்கப்பட்டு சென்னை நிர்வாக ஐஜியாக பதவி வகித்து வரும் டி.எஸ்.அன்பு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.