பிரதமர் மோடி கடவுளை விட குறைவானவர் அல்ல என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜ., மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், கடவுளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான கூட்டத்தை பாஜ., ஏற்பாடு செய்திருந்தது. அம்மாநில பாஜ., தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பாஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்ததால், மத துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் அனைத்து சிறுபான்மையினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கடவுளாக வந்துள்ளார்.
கடவுள் உங்களை உருவாக்கினார், தாய் உங்களைப் பெற்றெடுத்தார், ஆனால் மோடி, புதிய வாழ்க்கையையும், மரியாதையையும் கண்ணியத்தையும் கொடுத்துள்ளார்.
அவர், கடவுளை விட குறைவானவர் அல்ல. இவ்வாறு சவுகான் பேசினார்.