காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு விசாரணையில், மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வகையில் அரசு வழக்குரைஞர் ஆஜராகவில்லை என்பது தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளும் முறை குறித்து சந்தேகத்தைத் தூண்டியுள்ளது!
பாரதப் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் குறித்து அவதூறாகப் பேசியதுடன், அவர்களின் சோலியை முடிக்க இசுலாமியர்கள் களம் இறங்கவேண்டும் என்று கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசிய காங்கிரஸ் பிரமுகரும் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மீது பாஜக., வினர் புகார் கொடுத்ததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது. தொடர்ந்து, பல்வேறு கட்டப் போராட்டங்களை பாஜக.,வினர் நடத்தினர்.
போராட்டங்களில் ஈடுபட்ட பாஜக.,வினர் மீதும் வழக்குகள் பதியப் பட்டன. இந்நிலையில், வேறு வழியின்றி, பெரம்பலூரில் நெல்லை கண்ணன் கைது செய்யப் பட்டார்.
தொடர்ந்து, இன்று நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நெல்லை கண்ணன் ஜாமீன் மனுவை ஆட்சேபிக்க போலீஸ் தரப்பு தமிழக அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை.
ஏற்கெனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்திய பின்பே நெல்லை கண்ணன் கைது செய்யப் பட்டார். இந்நிலையில், அவரது ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது, ஆட்சேபம் தெரிவிக்க அரசு வழக்குரைஞர் ஆஜராகாத மர்மம் என்ன.? என்று கேள்வி எழுந்துள்ளது.
அப்படி என்றால் ஜாமீன் கொடுக்கப்பட்டு விடும் அல்லவா? அதனால் தான் வழக்குரைஞர் ஆஜராகவில்லையா என்ற கேள்வி பரவலாக எழுந்தது.
ஆனால், நீதிமன்றத்தில் இந்துமுன்னணி வக்கீல்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதை அடுத்து, நெல்லை கண்ணன் ஜாமீன் மனு மீதான உத்திரவு மாலை 6 மணிக்கு ஒத்திவைக்கப் பட்டது.