பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சோலியை முடியுங்கள் என்று நெல்லையில், இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான எஸ்டிபிஐ., கட்சியின் ‘குடியுரிமைச் சட்டத் திருத்த’த்துக்கு எதிரான போராட்டத்தின் போது பேசினார் காங்கிரஸ் பிரமுகரும் மேடைப் பேச்சாளருமான நெல்லை கண்ணன்.
அவர் மீது புகார்கள் குவியவே, பெரம்பலூரில் வைத்து கைது செய்யப் பட்டார் நெல்லை கண்ணன். அவருக்கு 13ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப் பட்டிருந்த நிலையில், ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை முதல் நாள் தள்ளி வைக்கப் பட்டது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆஜராகவில்லை. பாஜக.,வினர் மேற்கொண்ட போராட்டங்களால், நெல்லை கண்ணனைக் கைது செய்த தமிழக அரசு, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவிக்காமல் ஆதரவு காட்டியது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாகவும் பேசலாம், கொலை செய்யவும் தூண்டலாம், இஸ்லாமியர்களைத் தூண்டிவிடவும் செய்யலாம், அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்பதை தமிழக மக்களுக்கு பதியவைத்தது மாநில அரசு.
இந்நிலையில், இன்று மாலை நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு ஜாமீன் வழங்கியது நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம். நீதிபதி நசீர்அகமது நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனிடையே, பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், வழக்கை ஜன.20ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.