திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் தமது டிவிட்டர் பதிவில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு!
இன்று தமிழக அரசின் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடை, ருத்ராட்சம் மாலை, நெற்றியில் திருநீறு, குங்குமம் என பாரதீய பாரம்பரிய மரபுடன் திகழும் திருவள்ளுவர் படத்தை வெங்கய்ய நாயுடு தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு,தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
ஆனால், சிறிது நேரத்தில் காவி உடையுடன் காட்சி தரும் திருவள்ளுவர் படத்தை நீக்கிவிட்டு, தமிழக அரசு வெளியிட்டுள்ள திருவள்ளுவரின் படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இவ்வாறு இந்தப் படத்தை நீக்குமாறு, திமுக., சார்புள்ள நபர்கள் டிவிட்டரில் கூறியதை அடுத்து, அவ்வாறு செய்துள்ளதாகக் கூறப் பட்டது.
அதே நேரம், எத்தனையோ பேர் அந்தக் காவி உடை திருவள்ளுவர் படத்தை பதிவிடக் கோரியும், அவர்களின் கோரிக்கையை வெங்கய்ய நாயுடு செவி சாய்க்கவில்லை. திமுக.,வினரின் கோரிக்கையே ஏற்கப்பட்டுள்ளது, பாஜக.,தொடர்புடையவர்களின் கோரிக்கை ஏற்கப் படவில்லை.
இந்நிலையில், காவி திருவள்ளுவர் படத்தை நீக்கியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெங்கய்ய நாயுடு, முன்னர் பதிவிடப்பட்ட படம், தமது அலுவலகம் தவறுதலாக பதிவிட்ட ஒன்றாகும். குடியரசுத் துணைத் தலைவர் செயலக அலுவலக ஊழியர் ஒருவர் தவறுதலாக பதிவிட்டுள்ளார். அது தெரியவந்ததை அடுத்து அப்படம் நீக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.