சென்னை, மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது.
இது குறித்து போலீசார் கூறிய போது, ஜன.26 ஞாயிற்றுக் கிழமை இன்று அதிகாலையில் 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்துள்ளது. ஆனால் அப்போது அவரது வீட்டில் பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்துள்ளதைக் கண்டு, அந்த மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த மயிலாப்பூர் துணை ஆணையர், விசாரணை நடத்தி வருகிறார்… என்று கூறினர்.
கடந்த தை முதல் நாளில், துக்ளக் பத்திரிகை ஐம்பதாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ல் ஈ.வே.ராமசாமி நாயக்கர் இந்துக் கடவுள் படங்களுக்கு அவமரியாதை செய்ததை துணிவுடன் பிரசுரித்து, அதன் மூலம் அப்போதைய திமுக. முதல்வர் கருணாநிதியால் அனைத்து இதழ்களையும் பறிமுதல் செய்து, அதை பிளாக்கில் அச்சடித்து விற்று புகழ் பெற்றவர் சோ என்று கூறினார்.
இதை அடுத்து திமுக,. திக., தரப்புக்கும் ரஜினி தரப்புக்கும் இடையே பெரும் கருத்து மோதல்கள் வெடித்தன இந்நிலையில், அன்றைய நிகழ்வுகளை மீண்டும் வரும் துக்ளக் இதழில் பிரசுரிப்பதாக எஸ்.குருமூர்த்தி கூறிய நிலையில், அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத் தக்கது.