பாஜக., தலைவர் அமித் ஷா சொல்லித்தான் கட்சியில் சேர்த்துக் கொண்டோம் என்று நிதிஷ் குமாரால் கூறப்பட்டவரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் இப்போது, திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, ஏற்கெனவே இருக்கும் ஊடக படைபலம் போதாது என்று இன்று அதிகாரபூர்வமாக கைகோத்திருக்கிறார்.
தேர்தல் வியூக சேவை வழங்கும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோத்துள்ள திமுக., 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களம் காண உள்ளது என்பதை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், தனது டிவிட்டரில் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான ஐ-பேக், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உத்திகளை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. முன்னர் பிரசாந்த் கிஷோரின் நிறுவனம், பிரதமர் மோடி, நிதிஷ் குமார் என பல்வேறு தலைவர்களுக்காக பணியாற்றி உள்ளது.
தற்போது நடக்கவிருக்கும் தில்லி சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளது!
இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் இணைந்து 2021 தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவிருப்பதாக, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஸ்டாலினின் டுவிட்டர் பதிவு: இளம் சிந்தனையாளர்களை கொண்ட இந்தியன்பேக்(ஐ-பேக்) நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஐ-பேக் நிறுவனம் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். தேர்தல் திட்டங்களை வகுக்கவும், தமிழகத்தின் முந்தைய பெருமைகளை மீட்டெடுக்கவும் எங்களுக்கு அவர்கள் உதவுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவை ரீ-டுவிட் செய்துள்ள ஐ-பேக் நிறுவனம், அதனை உறுதி செய்துள்ளது.
இதனிடையே, இந்தப் பதிவுகளுக்கு சமூகத் தளங்களில் ஷார்ப் ரியாக்ஷனும் எழுந்துள்ளது. அவற்றில் சில…