நடைபயிற்சி சென்று கொண்டிருந்த அமைச்சரிடமே மர்ம நபர்கள் செல்போன் பறித்துச் சென்ற சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு நாளும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகர்ப்புறங்களில் ஆளில்லா சாலையில் செல்போன் பேசிக் கொண்டே செல்வோரை அதிவேக பைக்கில் வந்து பறித்துச் செல்வதை சிலர் தொழிலாகவே செய்து வருகின்றனர்.
இதற்காக தனிக்கும்பலே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் தேதி புதுச்சேரி கடற்கரைச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணனிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், அணைத்து வைக்கப்பட்டிருந்த அமைச்சரின் செல்போனை பின்னர் வில்லியனூர் பகுதியில் ஸ்விட்ச் ஆன் செய்துள்ளனர்.
இது குறித்து அறிந்து போலீசார் நடத்திய விசாரணையில், வில்லியனூரில் உள்ள மளிகைக் கடையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு அமைச்சரின் செல்போனை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர், அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அமைச்சரின் செல்போனை பறித்துச் சென்றது கொள்ளையர்கள் செந்தில் மற்றும் பாலா என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.