தில்லி கலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், தில்லி கலவரம் வெறும் 36 மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்த அவர், பிப்ரவரி 25க்குப் பிறகு கலவரங்கள் ஏதும் நிகழவில்லை என்றும், இதனை பெரும் அரசியலாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். தில்லியின் பிற பகுதிகளுக்கு கலவரம் பரவாமல் தடுத்ததாக போலீசாரை பாராட்டினார்.
தில்லி கலவரம் தொடர்பாக 700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 153 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். முதற்கட்ட விசாரணையில் கலவரம் திட்டமிட்டுத் தூண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், வன்முறைகளுக்கு நிதியுதவி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
வெறுப்புப் பிரசாரத்தைத் தூண்டுவதற்காக பிப்ரவரி 22 ஆம் தேதி 60 சமூக வலைதளக் கணக்குகள் தொடங்கப்பட்டு பிப்ரவரி 26-ஆம் தேதியே அவை டெலிட் செய்யப் பட்டுள்ளதாகக் கூறினார். இருப்பினும், இவ்வாறு போலியான சமூகத் தளப் பக்கங்கள் தொடங்கியவர்கள், இதில் தொடர்பு கொண்டவர்கள் ஒருபோதும் சட்டத்தில் இருந்து தப்ப முடியாது என்றார்.
அவர் மேலும் தெரிவித்தவை…
தில்லி கலவரத்தில் 1100 தூண்டிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
கலவரக்காரர்களை அடையாளம் காண முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அடையாளம் கண்டுள்ளோம்.
இவர்களில் பலர் உ.பி.யின் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் கலவரக்காரர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட, 40 குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
யாரும் எளிதில் தப்பிக்க முடியாது. (அவர்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி…)
இந்த கலவரங்களுக்கு வழிவகுத்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவர்.
சிஏஏ.,வைக் கடந்து செல்ல நாங்கள் நாடாளுமன்றத்தின் கதவுகளையோ தாழ்வாரங்களையோ மூடவில்லை
நாங்கள் அனைத்தையும் நாடாளுமன்ற நடைமுறைகளை நிறைவேற்றி அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் கொடுத்துள்ளோம்.
சிஏஏ.,வின் கீழ் எவரது குடியுரிமையையும் பறிக்க எந்த ஏற்பாடும் இல்லை. ஆனால் சிஏஏ குறித்து எவ்வளவு தவறான தகவல்கள் பரப்பப்பட்டன?
சிஏஏ ஆதரவாளர்களால் வன்முறை மூண்டதாக கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். குறிப்பாக, பெரும்பாலான சிஏஏ ஆதரவாளர்கள் பிப்.24ம் தேதிக்கு முன்பே தெருவில் வெளியே இறங்கிவிட்டார்கள் என்று கூறினர்…
இதெல்லாம் வெறுக்கத்தக்க பேச்சு இல்லையா என்று கேள்வி எழுப்பினார் அமித் ஷா.