spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉள்ளூர் செய்திகள்கூட்டுசேந்து ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க: தம்பி தீபக், சசிகலாவை திட்டித் தீர்த்த தீபா

கூட்டுசேந்து ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க: தம்பி தீபக், சசிகலாவை திட்டித் தீர்த்த தீபா

- Advertisement -

சென்னை:

கூட்டுசேந்து அத்தை ஜெயலலிலாவைக் கொன்னுட்டாங்க என்று, தனது தம்பி தீபக், சசிகலா ஆகியோரை திட்டித் தீர்த்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. நேற்று போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்திருந்து, கைகலப்பில் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது தீபா, தனது தம்பி தீபக், சசிகலா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வழக்கமாக மிகவும் அமைதியாக நிதானமாகப் பேசும் தீபா நேற்று ஆவேசம் வந்தவர் போல் திட்டித் தீர்த்தபடி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

என்னை வீட்டுக்கு வரச் சொன்னார்கள். நான் வந்தேன். வந்ததும் உள்ளே வைத்து அடிக்கிறார்கள். உள்ளே ராஜாம்மா (ஜெயலலிதாவுக்கு சமையல் செய்து கொடுத்தவர்) மட்டும் இருக்கிறார். அடியாட்கள் கூட்டமும் இருக்கிறது. என்னை அடித்து வெளியே தள்ளினார்கள். என்னுடைய தம்பி தீபக்தான் இங்கே வரச் சொல்லி என்னைக் கூப்பிட்டான். வீடு பூட்டப்பட்டிருந்தது. உள்ளே யாரும் இல்லை. வீட்டை திறந்துவிடக் கூறினால், முடியாது என்று அங்கிருந்தவர்கள் கூறினார்கள். வீட்டின் சாவி பிரியா என்பவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தனர். அந்த பிரியா யார் என்று தெரியவில்லை. வந்த டி.வி. கேமராமேனை உள்ளே இருந்தவர்கள் அடித்தனர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். என்னையும் அடித்து வெளியே தள்ளினார்கள். நான் இன்று இங்கே வருவதாகவே இல்லை. தீபக் தான் வரச்சொன்னான். நாளை (திங்கள்கிழமை) நான் தில்லி சென்று சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறேன். பிரதமரையும் சந்திக்க இருக்கிறேன். அதற்காக நேரம் கேட்டிருக்கிறேன்.

தீபக் எங்களை திட்டம் போட்டு வர வைத்திருக்கிறான். அம்மா (ஜெயலலிதா) படத்துக்கு பூ போட்டு விட்டுச் சென்றுவிடு. உன்னை யாரும் தடுக்க மாட்டார்கள் என்றான். நான் அவனிடம், ‘‘அங்கிருப்பவர்கள் என்னை உள்ளே விடமாட்டார்கள்’’ என்றேன். அதற்கு அவன், ‘‘நீ வா அவர்கள் கேட்டை திறந்து உள்ளே விடுவார்கள்’’ என்றான்.

நான் எதற்காக இங்கு வரவேண்டும். அவன் தான் என்னை இங்கு வர வைத்தான். காலை 5 மணியில் இருந்தே நீ வருகிறாயா என்று போன் செய்து கொண்டே இருந்தான். இப்படி ‘பிளான்’ பண்ணி வர வைத்து அடிக்கிறார்கள். சசிகலா கும்பலோடு தீபக் சேர்ந்து கொண்டு என்னை இங்கே வர வைத்து விட்டான். இங்கே பிரச்னை ஆனவுடன், நான்தான் மாதவனுக்கு போன் செய்து ‘‘என்னை உள்ளே வைத்து அடிக்கிறார்கள். எனக்கு பயமாக இருக்கிறது’’ என்று வரவைத்தேன்.

உள்ளே 4, 5 பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் யார், போலீசா? என்று கேட்டால், எதுவும் சொல்லவில்லை. நான் வரும்போது இங்கே எந்த போலீசும் கிடையாது. இப்போது இவ்வளவு போலீஸ் வந்திருக்கிறார்கள். உள்ளே அந்த ராஜாம்மா இருக்கிறார். 2 ரவுடிகள் இருக்கிறார்கள். சபாரி டிரெஸ் போட்டவங்க 2 பேர் இருக்கிறார்கள். உள்ளே வந்த கேமராமேனை அவர்கள் அடித்தனர்.

நான் மாதவனை வரச் சொன்னேன். ராஜா (தீபா பேரவை நிர்வாகி) என்னுடன் வந்ததால், அவர் மீது எதுவும் பொய் வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். தீபக் மட்டும் உள்ளே நின்று கொண்டு யாரிடமோ பேசினான். ஆனால், அவன் யாரிடம் பேசினான் என்பது எனக்கு தெரியாது…. என்று தீபா கூறினார்.

செய்தியாளர்கள் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

நீங்கள் சொத்தை கைப்பற்றுவதற்காக இங்கே வந்ததாக சொல்கிறார்களே?. என்று கேட்டதற்கு, “தீபக் தான் என்னை இங்கே வரச்சொன்னான். நான் இங்கு இன்று வருவதாக திட்டமே கிடையாது. தீபக் தான் சசிகலா குடும்பத்தோடு சேர்ந்து கொண்டு, எல்லோரும் திட்டமிட்டு எங்களை வரவழைத்து அடிக்கிறார்கள். நாங்கள் இன்று வெளியே தப்பித்து வந்ததற்கு காரணமே அந்த டி.வி. கேமராமேன் தான். அவர் உள்ளே வந்ததால் தான், உள்ளே இருந்தவர்களால் எங்களை எதுவும் செய்ய முடியவில்லை. இல்லை என்றால் உள்ளேயே எங்களை ஏதாவது செய்திருப்பார்கள். பணத்துக்காக தீபக் இதை செய்தான்” என்றார்.

தீபக் இங்கே உங்களை வரவைத்து இப்படி மாட்டிவிட காரணம் என்ன? என்று கேட்டபோது, “தீபக் சசிகலா ஆள். அம்மாவை சசிகலாவோடு, தீபக்கும் சேர்ந்துதான் கொன்றுவிட்டான். சொந்த அத்தையை, பெத்த தாய் மாதிரி இருந்தவங்களை கொன்று விட்டான். பணத்துக்காக அவர்களோடு சேர்ந்து தீபக் இதை செய்து விட்டான்…” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ பிரதமர் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். இதெல்லாம் ஒரு ஆட்சியே கிடையாது. இவர்கள் எல்லாம் (சசிகலா குடும்பத்தினர்) மனிதர்களே கிடையாது. சட்டம் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். தீபக்குக்கும் சேர்த்து தண்டனை கொடுக்க வேண்டும். நீங்கள் எல்லாம் மீடியாக்கள். உங்களை எப்படி அடிக்கலாம்? ஆரம்ப காலத்தில் நான் கூட மீடியாவில் தான் இருந்தேன். எப்படி அடிக்கலாம்? ஏற்கனவே கடந்த 4 நாட்களாக போலீசார் எங்களை கைது செய்ய முயற்சிக்கிறார்கள். வீட்டிற்கு வந்து நீங்கள் எப்படி பேரவை நடத்தலாம்?, எப்படி அறிக்கை விடலாம்? தினகரனுக்கு எதிராக எப்படி பேசலாம்? என்று மிரட்டுகிறார்கள். நான் எவனை பற்றி வேண்டுமானாலும் பேசுவேன். இவர்கள் யார் அதை கேட்பதற்கு?” என்றார்.

பிரதமரை இன்று சந்திக்கப் போவதாகக் கூறிய தீபா, “பிரதமரை சந்திக்க முன் அனுமதி கேட்டிருக்கிறேன். மாதவனை கொல்ல பார்க்கிறார்கள். ராஜா மீது வழக்கு போட பார்க்கிறார்கள். முதலில் என்னை ஏமாற்றி கூப்பிட்டு வந்த தீபக் மீது வழக்கு பதிவு செய்யுங்கள். சசிகலா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சட்டமும், கோர்ட்டும் அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும். என்னை கைது செய்ய வேண்டும் என்றால் செய்யுங்கள். ஆட்சி போனால் என்ன செய்வீர்கள்?” என்றார் ஆக்ரோஷமாக!

பிரதமரிடம் என்ன கோரிக்கை வைக்கப்போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அதிமுக.,வை இந்த அராஜக கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும். எனக்கும், என்னை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய தம்பியாலேயே (தீபக்) எங்களுக்கு ஆபத்து இருக்கிறது. அதிமுக., தொண்டர்களிடம் கேட்கிறேன், இந்தக் கட்சியை காப்பாற்றுங்கள். தமிழ்நாட்டு மக்களிடம் கேட்கிறேன், இந்தக் கூட்டத்திடம் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள்” என்றார் தீபா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe