தப்ளிக் சம்பவம் குறித்து போதுமான அளவுக்கு ஆலோசித்தும் விவாதித்தும் விட்டோம்; அந்தப் பிரச்னையை ஒவ்வொரு முறை யாராவது எழுப்பும் போதும், மனசு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், காணொளி உரையாடல் மூலம் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிபிஎல் நரசிம்ம ராவுடன் கலந்துரையாடினார். அப்போது இந்தியாவில் கொரோனா நோயாளிகள் அதிகரித்ததற்கு, தில்லி நிஜாமுதீன் தப்ளீக் ஜமாஅத் நிகழ்வுதான் காரணமாக இருந்ததா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியபோது, தில்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத் மாநாட்டைப் பற்றி நிறைய விவாதித்துவிட்டோம். இப்போது மட்டுமல்ல அப்போதும் ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப் படும் போதெல்லாம் மனதுக்கு கஷ்டமாகவே இருந்தது. வருத்தமாக உள்ளது. எனினும் அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து சிகிச்சையளித்து அவர்களை குணப்படுத்திவிட்டோம்.
அந்தச் சம்பவம் நடந்தபோது அனைத்து மாநில அரசுகள், தகவல் தொழில்நுட்பத் துறை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் முக்கியப் பங்காற்றி செயல்பட்டனர். அதனால் தான் அனைவரையும் கண்டுபிடிக்க முடிந்தது. அந்தச் சம்பவத்தை நினைத்தாலே வருத்தமாக இருக்கிறது.
மார்ச் 2ஆவது வாரத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிய நேரத்தில், இந்தியாவில் கொரோனா பரவல் மிகக் குறைவு. அந்த நேரம் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தது.
அனைத்து மாநிலங்களிலும் அப்போது சில நூறுகளில் மட்டுமே கொரோனா நோயாளிகள் இருந்தார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக, பொறுப்பற்ற வகையில் இந்தச் சம்பவம் நடந்தது. தில்லியில் மார்ச் மாதத்தில் அதிகபட்சம் 15 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை இருந்தபோது, 18 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்து தில்லி நிஜாமுதீன் மத மாநாட்டில் பங்கேற்றனர்.
வெளிநாட்டிலிருந்து அந்த மாநாட்டுக்கு வந்தவர்கள் கொரோனா நோயைச் சுமந்து வந்துள்ளனர். தப்லீக் ஜமாத்தில் ஏறக்குறைய ஆயிரம் பேருக்கு மேல் தங்கியிருந்தது அங்குள்ள அதிகாரிகளுக்குக் கூடத் தெரியவில்லை. அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்த பின்னர் அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர், பலர் தாங்களாகவே சென்றனர்.
அந்தச் சம்பவம் நடக்காதவரையில், கொரோனா நோயாளிகள் நம் நாட்டில் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. ஆனால் அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் நாட்டில் கொரோனா நோாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. அது நமக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.
அதன் பின்னர் தான் லாக்டவுனையும் மற்ற நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியது. அது துரதிஷ்டவசமான ஒரு சம்பவம்தான். நாடு ஒட்டுமொத்தமாக ஒரு முடிவு எடுக்கும்போது, ஒவ்வொருவரும் அதைப் பின்பற்றி ஒழுக்கமாக, அனைவரின் நலனுக்காக நடக்க வேண்டும். தப்லீக் ஜமாத் சம்பவம் நாட்டில் உள்ள அனைத்து சமூகத்துக்கும் ஒரு பாடம்” என்றார் டாக்டர் ஹர்ஷ்வர்தன்!
இந்த விவகாரத்தில், வெவ்வேறு மாநில அரசுகளும், உள்துறை அமைச்சக அதிகாரிகளும் நிறைய உதவினார்கள். தொடர்புத் தடம் அறியப்பட்டது. ஆனால் இறுதியில், நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்தது மற்றும் லாக்டவுனும் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும் அதைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டிய அவசியமில்லை! காரணம், நிறைய பேர் கண்டுபிடிக்கப்பட்டனர், தனிமைப்படுத்தப்பட்டனர்; சிகிச்சை பெற்று குணமும் அடைந்தனர்” என்றார் அமைச்சர்!.