கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய அழகுடன் வண்டலூர் புதிய பேருந்து நிலையம் அமைய இருப்பதாகவும், அசர வைக்கும் புதிய வரைபடம் இது என்றும் கூறி, ஊடகங்கள் வழியே மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தைக் கண்டு முகம் சுழிக்கிறார்கள் அதிமுக., விசுவாசிகள்.
காரணம், அமைய உள்ள புதிய பேருந்து நிலைய வரைபடம், அப்படியே திமுக.,வின் சின்னமான உதயசூரியனின் வடிவில் அமைந்திருக்கிறது, உண்மையில் ‘அம்மா’ இருந்திருந்தால், இப்படி ஒரு வரைபடத்தை கையில் காட்டும் போதே கிழித்து முகத்திலேயே எறிந்திருப்பார்கள்; அந்த சூட்சும அறிவு கூடவா அம்மா ஆட்சியை நடத்தி வருவதாகச் சொல்லிக் கொள்ளும் இவர்களுக்கு இல்லை என்று வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்தி இதுதான்… வண்டலூர் அருகே ரூ.309 கோடியில் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் முழு வரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் புது புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2013-ல் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது.
இந்த பேருந்து நிலையம் சுமார் 88.52 ஏக்கரில் நிலப்பரப்பில் ரூ. 309 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் 13 பிளாட்பார்ம்களுடன் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
82 மாநகர பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வகையில் 13 பிளாட்பாரங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் 1100 கார்களும் 2798 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் அமைகிறது.
தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 2,700 அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினமும் 75 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளது.
பயணிகள் தங்களின் உடமைகளை எளிதாக எடுத்துச் செல்வதற்காக நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன.
ஆட்டோ, கால் டாக்சி வாகனங்கள் நிறுத்தவும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்டலூரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த வரைபடத்தைப் பார்த்த அதிமுக., விசுவாசிகள், இது உதயசூரியன் சின்னத்தை பிரதிபலிக்கும் மாடலில் உள்ளது. தெருவோரம் திமுக., கொடி கட்டி, கருப்பு சிகப்பு டியூப்லைட்டுகள் கட்டி உதயசூரியன் சின்னத்தை வெளிப்படுத்தியது போல் உள்ளது. ஏற்கெனவே கோயம்பேடு பேருந்து நிலைய விவகாரத்தில், 99ல் அடிக்கல் நாட்டப்பட்டது முந்தைய கருணாநிதி ஆட்சியில் என்றபோது, கட்டி முடிக்கப் பட்டது 2002ல் தன் ஆட்சியில் என்றதால், முகப்பில் பெரிதாக பெயர் வைத்தார் ஜெயலலிதா. அடிக்கல் நாட்டப்பட்ட தகவல் இல்லை என்றதற்காக கருணாநிதி அப்போது பெரும் அரசியல் செய்தார்.
இப்படி நடக்கும் என்று தெரிந்துதான் 2001க்குள் கோயம்பேடு பேருந்து நிலையத்தைக் கட்டி முடித்து விட வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார் கருணாநிதி. ஆனால் அது முடியவில்லை. பின்னர் ஜெயலலிதா தன் பெயரை பெரிதாகப் போட்டுக் கொண்டார் என்ற காரணத்துக்காக பின்னர் அதில் அரசியல் செய்தார்கள்.
இப்போதும் அடுத்த வருடம் தேர்தல் வரப்போகிறது. அதற்காகவே இவ்வாறு திமுக., சார்பிலான வடிவமைப்பு கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் அம்மா விசுவாசிகள்!