மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப் படுவதாகவும் கூட்டணி குறித்து முடிவு எடுக்க கமல்ஹாசனுக்கு முழு அதிகாரம் உண்டு எனவும் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது..
2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.
சென்னை பாண்டி பஜாரில் தனியார் நட்சத்திர விடுதியில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்தும், தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் அக்கட்சி சார்பில் வெளியான அறிக்கையில்… 2021 சட்டசபைத் தேர்தலின்போது தனித்துப் போட்டியிடுவது அல்லது ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது, வேட்பாளர்களை இறுதி செய்வது, தேர்தல் வெற்றிக்கான வியூகம் அமைப்பது, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது ஆகியவை குறித்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பை கமல்ஹாசனுக்கு அளிப்பதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக்கிறது.