spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்விடுதலை சிறுத்தைகளால் இளைஞர் எரித்துக் கொலை: தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகளால் இளைஞர் எரித்துக் கொலை: தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை

- Advertisement -

விடுதலை சிறுத்தைகளால் இளைஞர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இந்தக் கொலைக்குத் தூண்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியம் சாத்தாவட்டம் கிராமத்தில் மணல் கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டவர்களை பழிவாங்கும் வகையில் அப்பாவி இளைஞரை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய  நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரின் மகன் ஆனந்தன் ஐ.டி.ஐ படித்து விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். நேற்று முன்தினம் மாலை  சாத்தாவட்டம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர், ஆனந்தனை வழிமறித்து அவரது கைகளையும், கால்களையும் பிடித்துக் கொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு எரித்துள்ளனர். தீயின் கொடுமை தாங்க முடியாமல் ஆனந்தன் ஓலமிட்டதைக் கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஓடிவந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை  விரட்டி அடித்து விட்டு, ஆனந்தனை மீட்டனர். உடல் முழுவதும் 90% தீக்காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்தன் மருத்துவம் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

ஆனந்தனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  எரித்துக் கொன்றதை சாதாரணமான நிகழ்வாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. சாத்தாவட்டம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்தாவட்டத்தையடுத்த கூடலையாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிச் செல்லும் சரக்குந்து ஓட்டுனர்களை மிரட்டி, ஒரு சரக்குந்துக்கு ரூ.200 வீதம் மாமூல் வசூலிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். லட்சக் கணக்கில் வசூலாகும் மாமூல் பணத்தில் ஒரு பகுதியை காவல்துறையினருக்குக் கொடுத்து விட்டு,  மீதமுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் வரை மாவட்ட நிர்வாகிகள் வரை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, மாமூலாக கிடைக்கும் பணத்தில் குடித்து விட்டு ரகளை செய்வது, சாத்தாவட்டம் வழியாக செல்லும் பெண்களை பேருந்து நிறுத்தத்திற்குள் இழுத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

தீபஒளியன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் குடிபோதையில் சாத்தாவட்டம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை அருவருக்கத் தக்க வகையில் திட்டியுள்ளனர். இதை பாதிக்கப்பட்ட பெண்களின் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தட்டிக்கேட்டதையடுத்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகளின் அத்துமீறல்களை ஆனந்தன் தொடர்ந்து தட்டிக்கேட்டு வந்ததால் அவர் உள்ளிட்டோர் மீது பொய்ப்புகார் கொடுத்த சமூக விரோதிகள் அவரை கைது செய்ய வைத்தனர். காவல்துறை ஆதரவுடன் மணல் சரக்குந்து ஓட்டுனர்களிடம் மாமூல் வசூலிப்பதற்கும் ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அவர்களும் தங்கள் பகையை தீர்த்துக் கொள்ள ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் சிறையிலிருந்து பிணையிலிருந்து வந்த நிலையில் தான் ஆனந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளால் கொடூரமான முறையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மணல் கொள்ளை மாமூல், பெண்களை சுதந்திரமாக நடமாட விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, மதுபோதையில் தகராறு செய்வது உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அத்துமீறல்களை  அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து எதிர்த்ததால் தான் ஆனந்தன்  எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். குறிப்பாக மணல் கொள்ளை மாமூல் வசூலால் பயனடைந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் தான் ஆனந்தன் மீதான தாக்குதலுக்கு தூண்டுகோலாக இருந்திருக்கின்றனர். இந்த உண்மைகள் அனைத்தும் அப்பகுதி மக்களுக்கும், அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றாக தெரியும் என்றாலும் கூட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் தயங்குகின்றனர். இது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

ஆனந்தன் தான் அவரது குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். பெற்றோரைக் காப்பாற்றவும், தங்கையின் திருமணத்திற்காகவும் அவர் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் தான் அவர் கொல்லப் பட்டிருக்கிறார். அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் மட்டுமின்றி பின்னணியில் இருந்து இயக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆனந்தன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இரு நாட்களில் இதைச் செய்யத் தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe