திருச்சி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனக்கும் தி.மு.க.,வுக்கும்தான் நேரடிப் போட்டியே என்று கூறியுள்ளார் டிடிவி தினகரன் கூறினார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.தி.மு.க., எங்கள் இயக்கம். அதை மீட்டெடுப்போம். தைரியம் இருந்தால் ஜெயா டிவி.,யை கைப்பற்றச் சொல்லுங்கள் பார்ப்போம். ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை, எங்கள் மீதான வருமானவரி சோதனை தொடரும். துரோக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அம்மா ஆட்சியை செயல்படுத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் திமுக.,வுக்கும், எனக்கும்தான் நேரடிப் போட்டியே.
இரட்டை இலைச் சின்னம் குறித்த விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு என்பது இறுதித் தீர்ப்பு அல்ல. தகுதி நீக்கம் செய்யப்படுவோமோ என்ற அச்சத்தில் மூன்று எம்.பி.,க்கள் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் அங்கே சென்றுள்ளனர். சின்னத்திற்கு நாங்கள் இடைக்காலத் தடை பெற்று விட்டால், மீண்டும் அந்த மூவரும் இங்கே வருவதாகக் கூறியுள்ளனர். தேர்தல் ஆணையம் மத்திய அரசின் அங்கம் என்பதால், அவர்கள் ஆட்சியாளர்களுக்கு தான் விசுவாசமாக இருப்பார்கள். எனக்கு தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை என்று கூறினார்.