வன்னியர்களுக்கு தனியாக 20% இட ஒதுக்கீடு தரப்படவேண்டும் என்கிற போராட்டம் 1987ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது நான் சிறு குழந்தை என்றாலும் , என் தந்தை முதற்கொண்டு என் உறவினர்கள் பலரும் அதில் பங்குபெற்றவர்கள் தான்.
அந்த போராட்டத்தில் 21 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியும் , 4 பேர் சிறையிலும் அநியாயமாக இறந்து போனார்கள்.
ஆனால், இவ்வளவு பெரிய இழப்பிற்கு பிறகு கோரி்க்கை கிடைத்ததா என்றால் கிடைக்கவில்லை. கோரிக்கை கிடைக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை. முன்பு இருந்ததை விட ஒரு ‘மோசமான நிலைக்கு’ வன்னிய சமுதாயம் “சூழ்ச்சி” அடிப்படையில் தள்ளப்பட்டது.
“என்ன இப்படி சொல்றீங்க ?!” யாராவது போராடி முன்பு இருந்ததை விட மோசமான நிலைக்கு செல்வார்களா என்று நீங்கள் கேட்டால் , நடந்த உண்மை அதுதான்.
1987 இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு முன்பு வரை , எம்ஜிஆர் ஆல் OBC மக்களுக்கு 50% இட ஒதுக்கீடு தரப்பட்டு வந்தது !
அதில் , அதில் வன்னியர்களுக்கு மட்டும் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் போராட்டமே நடந்தது.
ஆனால் MBC என்கின்ற ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு அதில் 108 ஜாதிகள் சேர்க்கப்பட்டு, அதில் ஒரு ஜாதியாக வன்னியர் சமுதாயம் சேர்க்கப்பட்டு அதற்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு என்று வழங்கப்பட்டது.
இதற்கு பதிலாக , முன்பு இருந்த ஒட்டுமொத்த OBC ( BC & MBC சேர்த்து) 50% என்கின்ற நிலையே தொடர்ந்திருக்கலாம்.
20% சதவீதம் என்கிற குறுகிய வட்டத்தில் 108 சாதிகளோடு சேர்ந்து , பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயம், கல்வி வேலை வாய்ப்புகளில் போராடுவதை விட , 50% என்கிற பெரிய வட்டத்தில் போட்டியிடும்போது , எண்ணிக்கையில் பெரும்பான்மையான வன்னியர் சமுதாயத்திற்கு அதிக வாய்ப்புகள் கிடைத்திருக்கும் தானே ?!
இந்த வரலாற்று துரோகத்தை வன்னிய பெருமக்களுக்கு இழைத்தவர் கருணாநிதி ! போராடிய மக்களுக்கு முன்பு இருந்ததை விட மோசமான ஒரு நிலையைக் கொடுத்துவிட்டு , அதை ,ஏதோ பெரிய நன்மை தனக்கு கிடைத்துவிட்டதைப் போல எண்ண வைக்க இந்த திராவிடத் திருட்டுத்தனங்களால் முடிகிறது.
இதை எப்படி அப்போது போராடிய வன்னிய சமுதாயத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பது தெரியவில்லை.
சரிங்க அஸ்வத்தாமன் , இது உங்கள் வன்னிய சமுதாய மக்களுக்கு தெரியாதா?! எவ்வளவோ படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள்?! MBC இட ஒதுக்கீடு ஏதோ மிகப்பெரிய பலனை கொடுத்துவிட்டதாக சொல்கிறார்களே ?! என நீங்கள் கேட்கலாம்.
1987 க்கு முன்பு OBC க்கு 50% இட ஒதுக்கீடு தரப்பட்டு வந்தது என்பதே இங்கு பலருக்கும் தெரியாது. எனக்கும் கூட சட்டக் கல்லூரி முடிக்கும் வரை கூட தெரியாமல்தான் இருந்தது. அதாவது, 1987 க்கு பிறகு தனியாக MBC க்கு 20% சதவீதம் தனியாக உருவாக்கப்பட்டு , கொடுக்கப்பட்டது போன்ற ஒரு
கற்பனை இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனால்தான், தன் தலையில் மிளகாய் அரைக்கப்பட்டது கூட தெரியாமல் வன்னிய சமுதாயத்தில் பலரும் இருக்கிறார்கள். (நான் முன்பு இருந்தது போல)
1987 ன் நிலையை ஒப்பிடும்போது வன்னியர் சமுதாயத்தில் படித்தவர்கள் எண்ணிக்கை தற்போது அதிகமாகி இருக்கிறதே ?! என கேட்பார்கள்.
அனைத்து சமுதாயத்திலும் படித்தவர் எண்ணிக்கை அதிகமாகத்தானே ஆகியிருக்கிறது. அது கால மாற்றத்தால் ஏற்பட்டது தானே ?!
ஒரு சின்ன விஷயம் சொல்லுகிறேன். மத்திய அரசின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் OBC க்கு, அதாவது BC யும் , MBC யும் சேர்த்து , 27% மட்டும்தான் கொடுக்கப்படுகிறது. அதிலேயே , அதாவது , வெறும் 27 சதவீதத்திலேயே இத்தனை வன்னியர்கள் மத்திய அரசின் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் தேர்வாக முடிகிறது என்றால்,
தமிழக படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகளில் 50 % ஆக இருந்த நிலை நீடித்திருந்தால் , எவ்வளவு பேர் வந்திருப்பார்கள் ????!?
OBC மக்களுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதே 1980ல் தான் , 10 வருடங்கள் முடியும் முன்பே அதற்கு MBC இட ஒதுக்கீட்டின் மூலம் ஆப்பு வைக்கப்பட்டதால் , அதன் பலனை “வன்னிய மக்கள்” அனுபவிக்காமலேயே போய்விட்டார்கள்.
இந்த வரலாற்று துரோகம் நடந்தது 1989 ல் , ஆனால் இப்போது தான் வன்னிய சமுதாயத்தின் அந்த 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை மீண்டும் எழுப்பப்படுகிறது.
1987லிருந்து 1989வரை ( இரண்டு வருடங்கள்) போராடியது சங்கம். அதன்பிறகு இப்போது வரை இருப்பது ( 30 வருடங்கள் ) அரசியல் கட்சி , அதுதான் சங்கத்திற்கும் , அரசியல் கட்சிக்குமான வித்தியாசம். அதுசரி , அது ஒரு கட்சியின் பிரச்சனை . அதற்குள் நாம் போகவேண்டாம்.
நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். 20% தனி இட ஒதுக்கீடு என்பது ஒருவேளை கொடுக்கப்பட்டால் , அது வன்னிய சமுதாயத்திற்கு நன்மை தரப்போகும் விஷயமா என்றால் ‘நன்மை தரும்’ தான்.
ஆனால், இப்போதைய உடனடி தேவை , அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று, இந்த MBC முறை நீக்கப்பட்டு பழைய 50% OBC இட ஒதுக்கீடு தொடரப்படவேண்டும் . 30 வருட வரலாற்று துரோகம் சரி செய்யப்பட வேண்டும்.
- அ.அஸ்வத்தாமன்