மதுரை : நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் என்று கூறுவார்கள். திருவள்ளுவரின் திருக்குறளும் அவ்வாறு கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கொட்டும் மழையில் குடை பிடித்த படி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
நாளை மதுரையில் 1,295 கோடி ரூபாய் மதிப்பில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானம் நுழைவுவாயில் பகுதியில் பிரம்மாண்ட முல்லைப் பெரியாறு அணை குடிநீர்த் திட்டம் குறித்த மாதிரி வடிவத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசிய போது…
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ரூ.1,295 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இது வரலாற்றில் மிக முக்கிய ஒன்று. மதுரை மக்கள் மிகவும் நன்றியுடையவர்கள்.
நம் மக்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தாலே அவர்களுக்காக எதையும் செய்வார்கள். அதுவே இந்த மண்ணின் குணம். இந்த தலைமுறைக்கும் மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதிமுக சார்பில் 20 இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.
அண்டா குண்டா சட்டி உள்ளிட்ட எதுக்கும் இனிமேல் வேலை இல்லை. மதுரை மக்கள் வீடுகளில் இருந்தபடியே மக்கள் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் எனக் கூறுவார்கள். திருவள்ளுவர் திருக்குறளும் அவ்வாறு கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது.
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளனர். எங்களுடைய திட்டங்களை செயல்பாடுகளை கண்டு எங்களுக்கு ஆதரவளிப்பார்கள். எங்கள் செயல்பாடுகளைக் கண்டு எதிர்க் கட்சித்தலைவர் கூட குற்றம் குறை சொல்ல முடியவில்லை.
புயல் மழை காலங்களில் பொதுமக்களுக்கு தாமதமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம் என தெரிவித்தார்.