சென்னை:
2ஜி வழக்கிலிருந்து விடுதலையான பின்னர் திமுக தலைவர் கலைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்ற 2ஜி வழக்கில், குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது எனக்கூறி முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் நீதிபதி ஓ.பி.ஷைனி விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து திமுக தலைவர் கலைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
‘பனிக்குடத்தில் வைத்து என்னை பத்திரப்படுத்திய தாயான உங்களுக்கு தீர்ப்பை காலடியில் வைத்து வணங்குகிறேன். மீண்டும் உங்களின் வாசகங்கள் என்னை வந்து வருடுகின்றன.
குறைகூறிய எவருக்கும் நெஞ்சம் என்ற ஒன்றே இல்லை, என்றாலும் நீதி நமக்கு கிடைத்திருக்கிறது. அலைவரிசை புயலின் கோரத்தாக்குதல் தனிமனிதர்கள் மட்டுமல்ல இயக்கத்தையும் களங்கப்படுத்தியது.
மனிதர்களை அல்லாமல் தத்துவார்த்தம் கொண்ட இயக்கமும் 7 ஆண்டுகள் களங்கப்படுத்தப்பட்டன.
2ஜி தீர்ப்புக்காக டெல்லி செல்கிறேன், என்று சொன்ன போது, உங்கள் உதடுகள் சரி என்று உச்சரித்தும் சப்தம் வரவில்லை என்றாலும், வலதுகரம் உயர்த்தி புன்னகையோடு வாழ்த்தினீர்கள்.
2ஜி வழக்கின் தீர்ப்பை அடுத்து நித்திரை கொள்ளாமல் நடுநிசியில் கடிதம் எழுதினேன்’