ஜூன் 16 :ஜம்பு தீவு பிரகடனம்
16-06-1801 மாவீரர் மருது பாண்டியர் ஆங்கிலேயர்களை எதிர்த்து திருச்சிக் கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனம் செய்த நாள்.
தமிழர்களின் வீரம் மற்றும் பாரம்பரியத்தை மறைக்க கொண்டுவரப்பட்ட திராவிடத்தை துறந்து தமிழனாய் வரும் 16ம் தேதி ஒன்று கூடுவோம். #1801_ஜம்புத்தீவுபிரகடனம் .. என்று சமூகத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ஒன்றியம் என்ற வார்த்தையை அதிகமாக பிரிவினை வாதிகள் விதைக்கின்றனர். ஆனால் கிறிஸ்துவ ஆங்கிலேயனை எதிர்த்து மருது சகோதரர்கள் அறிக்கை விட்டது தான் ஜம்புத் தீவு பிரகடனம்…
இதில் நாம் கவனிக்க வேண்டியது ஜம்புத் தீவு பிரகடனம் என்பது பாரதம் மட்டுமல்லாமல் நம்முடைய மிக உயர்ந்த நோக்கமான அகண்ட பாரதம் நோக்கத்தை அப்போதே வெளிப் படுத்தியுள்ளார்கள் மருது சகோதரர்கள். ஆம் ஜம்பு தீவு என்பது சரித்திரங்களில் அகண்ட பாரதமாக ஆக இருந்துள்ளது , இருக்கிறது.
நாம் இதை தற்போதைய சூழ்நிலைக்கு பிரகடனமாக வெளிப்படுத்த வேண்டும் … என்று தங்களது கருத்துகளை சமூகத் தளங்களில் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
அதென்ன ஜம்புத் தீவு பிரகடனம்?
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்…
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள் தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.
உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது. இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.
அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்…
ஆதலால்….. மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்… இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்… இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது… இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!….
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்… எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்…
இப்படிக்கு,
மருது பாண்டியன்
பேரரசர்களின் ஊழியன்,
ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.
குறிப்பு: 1801-ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இவ்வறிக்கை , திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் ஒட்டப் பட்டிருந்தது. இங்கே மொழிபெயர்த்து சுருக்கித் தரப் பட்டுள்ளது.
ஜம்புத்தீவுப் பிரகடனம் குறித்த மேலும் சில தகவல்கள்…