தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, நீட்தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்றவற்றையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி அதிமுக.,வினர், திமுக சொன்னீங்களே செஞ்சீங்களா?! என்ற பெயரில் போராட்டத்தை நடத்தி வருகிறது.
திமுக அரசு பொறுப்பேற்று 3 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானவை ஒன்றை கூட நிறைவேற்ற வில்லை என திமுகவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதே போல், சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
திமுக., தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில் உள்ளதால், மக்களை திசைதிருப்ப அதிமுக., முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை செய்கின்றனர், பொய் வழக்கு போடுகின்றனர்” என்று, எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை உள்ளிட்ட முக்கியமான பல்வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுக.,வினர் தமிழகம் முழுதும் இந்தப் போராட்டங்களை நடத்தினர்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியபோது.. திமுக சார்பில் 505 அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளனர். அதில் முக்கியமான சில விஷயங்களை கூட திமுக நிறைவேற்ற வில்லை. பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.
ஸ்டாலின் முதல்வர் ஆனதும் முதல் வேலையாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார். தேர்வை ரத்து செய்யாமல் கண்துடைப்பிற்காக கமிஷன் ஒன்றை அமைத்துள்ளனர்.
கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000, பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும், 5 சவரனுக்கு குறைவான வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், இதுவரை அது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இது தொடர்பாக மக்கள் கொந்தளிப்புடன் கேள்வி கேட்கும் நிலையில், மக்களை திசைதிருப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை, பொய் வழக்கு போடுதல் என திமுக.,வினர் ஈடுபடுகின்றனர் என்றார் அவர்.