அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிமுக பொதுக்குழு வரும் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக அறிவித்தது. ஆனால், இது சட்ட விரோதமானது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறியது. இந்த நிலையில், இன்று இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் செய்தியாளர்களுக்கு சிவி சண்முகம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ல் ஒரு பங்கு பேர் கையெழுத்து போட்டு கொடுத்தால் 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்ட வேண்டும். நேற்று நடைபெற்ற பொதுக்குழு முறையற்றது எனக்கூறிய வைத்திலிங்கம் கருத்து ஏற்புடையது இல்லை. பொதுக்குழுவை கூட்ட எந்த ஆட்சேபனையும் இல்லை என ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தில் கூறியது. ஓபிஎஸ் கையெழுத்திட்டு கூட்டப்பட்ட பொதுக்குழுவை முறையற்றது என்கிறாரா வைத்திலிங்கம்? அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது.
பன்னீர் செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர். அதிமுகவின் சட்டவிதி 19ன் படி முறையாக பொதுக்குழுவை கூட்டினோம். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்; அதுதான் அதிமுகவின் சட்ட விதி அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது. பொதுக்குழுவில் தான் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது. எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி கூறுகிறது. மேலும், அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார் .