.
மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் தவறு செய்தால், அதைக் கேள்வி கேட்கும் உரிமை ஊடகதிற்கு உள்ளது. அதேபோல், ஊடகம் தவறு செய்தால் அதனைக் கண்டிக்கும் உரிமை மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் உண்டு என்று ஏற்பதுதான் நேர்மை. ஊடகம் மக்களின் மனசாட்சி என்பது உண்மை. அந்த ஊடகங்களில் சிலர் மனசாட்சி இல்லாமல் நடந்தால், நமக்குள்ளேயே சரிசெய்து கொள்ளவேண்டியது சக ஊடகவியலாளர் கடமை. இந்த அடிப்படையில், தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் இந்த அறிக்கையை வெளியிடுகிறது.
மிகப்பெரிய அவமானம் நிகழ்ந்துவிட்டது. ஊடகவியலாளர்களுக்கு.
“கூட வா! தீக்குளிக்கலாம்!” என்று அச்சுறுத்தியபோதும், தெருவில் ஓடவிட்டு மூன்று ஊடக நண்பர்களை எரித்தபோதும் நிகழாத இழுக்கு. சிவப்பு விளக்கு வெளிச்சம் வீசப்பட்ட போதும், தேதி குறிப்பிடாத போதும், காது கேட்கவில்லை என்று கடந்து சென்றபோதும் நடந்ததை விட பழுத்த அவமானம்.
எங்கே சென்றாலும் பத்திரிகையாளர்களுக்கு நேரம் ஒதுக்கும் ஒரு தலைவர். இரண்டு பேர் ஒரே நேரத்தில் கேள்வி கேட்டால், தனக்கு வசதியான கேள்வியை மட்டும் தேர்வு செய்யாத தலைவர். கடைசி கேள்வி என்று சொன்ன பிறகும் தொடர்ந்து வரும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லும் தலைவர். “பதில் சரியா இருக்கா அண்ணா / அக்கா?” என்று தன் பதிலை நம்மிடமே சரிபார்க்கும் தெளிவுள்ள தலைவர். மொத்தத்தில் ஊடகத்தை மதிக்கும் ஒரு இளம் ஆளுமை.
அவர் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்கு குடியே முழுகிவிட்டது என்று ஒரு கூட்டம் கூச்சல் போடுகிறது. நேர்மையும் கடமை உணர்ச்சியும் மிகுந்த ஊடகவியலாளர் இடையே சில கருப்பு ஆடுகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றன.
தலைவர்களிடம் கேள்வி கேட்பதும், அவர்களின் பதில்களை மக்களிடம் சென்று சேர்ப்பதும் நமது கடமை, ஒரே கடமை. ஆனால், நாம் கேள்வி கேட்கும் நபர்களுக்கு நமக்கு பதில் சொல்வது மட்டும்தான் வேலை என்று எண்ணுவது சிக்கலின் துவக்கம். வேலைப் பளுவின் காரணமாக, ஒரு தலைவர் சில நாட்கள் ஊடகதிற்கு நேரம் ஒதுக்க இயலாமல் போவது இயல்பு. தனது நிகழ்ச்சி நிரலில் தினமும் ஊடகதிற்கு நேரம் ஒதுக்கும் அரசியல் ஆளுமை அண்ணாமலை என்பது நிதர்சனம். அவ்வாறு இன்று ஒதுக்க இயலவில்லை.
நேரமில்லை என்பதை நேரடியாக, கண்ணியமாகச் சொல்பவர் அண்ணாமலை, இன்றும் சொல்லி இருக்கிறார். இதையும் மீறி, வற்புறுத்தி, அவரைப் பின்தொடர்ந்து சில ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர். இப்படித் துரத்தி, வற்புறுத்திச் செய்தி சேகரிப்பதற்கு ஆங்கிலத்தில் PAPARAZZI என்று பெயர். இத்தகைய ஒரு துரத்தல் இங்கிலாந்து இளவரசி டயானா மரணத்தில் சென்று முடிந்தது நினைவிருக்கும். அந்தத் துயரம் உலக ஊடகங்கள் மீது படிந்த அழிக்க முடியாத பெரும்பழியாக இன்றும் நிற்கிறது.
- தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம்.