புது தில்லி:
நாடு முழுதும் தே.ஜ.கூட்டணி ஆட்சி இருக்க வேண்டும் என்ற பாஜக., தலைவர் அமித் ஷா தனது ஆசையை நிறைவேற்ற, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறி வரும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சமரசப் பேச்சை தொடங்கவுள்ளார்.
இதை அடுத்து, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. அண்மையில் மத்திய பட்ஜெட்டில், ஆந்திர மாநில அரசுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்ற மனத்தாங்கல் சந்திரபாபு நாயுடுவுக்கு இருந்தது. மேலும், ஆந்திரத்தை மத்திய அரசு புறக்கணித்து வருவதாகவும் அவர் தனது திருப்தியற்ற நிலையைத் தெரிவித்து வந்தார். இதனால், தாம் கூட்டணியில் இருந்து விலகப் போவதாகக் கூறி வந்தார். இருப்பினும், மாநில நலன் கருதி தனது முடிவை ஒத்திப் போடுவதாகக் கூறினார். இந்நிலையில் ஆந்திரா மறுசீரமைப்பு சட்டம், ஆந்திர மாநில அரசுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு முன் வைத்துள்ளார்.
இதை அடுத்து, சந்திரபாபு நாயுடுவின் அதிருப்தி மன நிலையை சரி செய்யும் விதமாகவும், பேச்சுவார்த்தை நடத்தவும் பா.ஜ.க., தேசியத் தலைவர் அமித்ஷா தொலைபேசி வாயிலாக சந்திரபாபு நாயுடுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று சந்திரபாபு நாயுடு சார்பில் பிரதிநிதிகள் மார்ச் 5-ம் தேதி அமித்ஷாவை சந்திக்கின்றனர். அப்போது நாயுடுவை சமரசம் செய்யவும், தேஜ., கூட்டணியில் இருந்து வெளியேறும் அவரது முடிவை மறு பரிசீலனை செய்யச் சொல்லவும் அமித்ஷா முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது.