spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதகர்ந்தது இடதுசாரிகளின் கனவுக் கோட்டை; எஞ்சியிருப்பது கேரளம் மட்டுமே!

தகர்ந்தது இடதுசாரிகளின் கனவுக் கோட்டை; எஞ்சியிருப்பது கேரளம் மட்டுமே!

- Advertisement -

இடதுசாரிகளின் கோட்டையாகத் திகழ்ந்த திரிபுரா மாநிலத்தில் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தோல்வி அடைந்திருக்கிறது. இடதில் இருந்து வலதுக்கு மாறியிருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகளுக்கு இது பலத்த அடிதான். மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வர் மாணிக் சர்க்கார் எளிமைக்கு பெயர் பெற்றவர் என்று ஊடகங்கள் முன்னிறுத்திய போதும், அவரது எளிமையால் மாநிலத்துக்கு என்ன பலன் கிடைத்திருக்கிறது என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் வாக்காளர்கள்.

1993ல் இடதுசாரிகளின் தசரத் தேவ் வெற்றி பெற்று முதல்வரானார். தொடர்ந்து 1998ல் மீண்டும் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாணிக் சர்க்காரை முதல்வராக்கியது. அதைத் தொடர்ந்து, 2003, 2008, 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் இடதுசாரிகளே வெற்றி பெற்றனர். தொடர்ந்து நான்கு முறை மாணிக் சர்க்கார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். ஐந்தாம் முறையாக அவர் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இந்தத் தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.

இந்த வெற்றியை அண்மையில் திரிபுராவில் இடதுசாரிகளின் வன்முறையினால் கொல்லப்பட்ட பாஜக., தொண்டர்கள் 9 பேருக்கு காணிக்கை ஆக்கியிருக்கிறார் அமித் ஷா. வாக்குகளை வைத்து வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் மக்கள் என்று கருத்துகளை வேறு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

மூன்று மாநிலங்களில் என்றும், இரண்டரை மாநிலங்களில் மட்டும் இருக்கும் கட்சி என்றும் இடதுசாரிகளை பாஜக.,வினர் குறிப்பிடுவர். இந்தியாவில், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியைப் பிடித்து வந்தனர். கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்துகொண்டிருக்கும். அங்கே காங்கிரஸும் கம்யூனிஸ்டும் போட்டி போட்டுக் கொண்டிருந்த நிலையில், அசைக்க முடியாத மாநிலமாக கம்யூனிஸ்ட்கள் ஆட்சி செய்தவை மேற்கு வங்கமும், திரிபுராவும்தான்.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தது கம்யூனிஸ்ட். அக்கட்சியின் சார்பில் முதல்வராக வெகு காலம் இருந்தார் ஜோதி பாசு. பின் கம்யூனிஸ்டுகள் 2011ல் மம்தா பேனர்ஜியிடம் மாட்டிக் கொண்டு வீழ்ந்தனர். திரிணமூல் காங்கிரசிடம் ஆட்சியை இழந்தது முதல் அந்த மாநிலத்தில் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து தேர்தல் தோல்வியையே சந்தித்து வருகின்றனர். அங்கே எதிர்க்கட்சி என்ற பலத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது கம்யூனிஸ்ட் கட்சி. வன்முறைகளுக்குப் பேர் போன கம்யூனிஸ்ட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ந்து, அவர்களின் வீழ்ச்சிக்கு நிகராக மேற்கு வங்கத்தில் பாஜக., வளர்ந்து வருகிறது.

கம்யூனிஸ்ட்களின் அடுத்த பலம் வாய்ந்த கோட்டை திரிபுரா மாநிலம். 2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், கம்யூனிஸ்டுகளின் வீழ்ச்சியையும், பாஜகவின் எழுச்சியையும் காட்டுகிறது. மொத்தமுள்ள 59 தொகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியான திரிபுரா உள்நாட்டு மக்கள் முன்னணி (ஐ.பி.எஃப்.டி.) இரண்டும் சேர்ந்து 43 தொகுதிகளில் வென்றுள்ளன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூடக் கிடைக்கைல்லை. இதை அடுத்து திரிபுராவில் பாஜக., முதல் முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. கம்யூனிஸ்ட் தொடர் வெற்றிக்கு முடிவுரை எழுதப் பட்டுள்ளது.

திரிபுராவில் 20 ஆண்டுகளாக ஆட்சி செய்த மார்க்சிஸ்ட்க்கு ஏன் இந்த இமாலய சரிவு என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

எளிமையான முதல்வர் என்ற முகத்தை ஊடகங்களில் காட்டிக் கொண்டு, திரிபுராவில் வன்முறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தனர் மார்க்சிஸ்ட் கட்சியினர். பழங்குடியினர் மீதான வெறித் தாக்குதலும், தொடர்ந்து பாஜக., தொண்டர்கள் மீதான கொலைகளும் அங்கே கட்சியின் மீதான நம்பிக்கையை சிதைத்துக் கொண்டிருந்தது.

மோடி பிரதமர் ஆனதும் முதலாவதாக சீனாவின் மீதுதான் தன் பார்வையைப் பதித்தார். தொடர்ந்து சீன எல்லையை ஒட்டிய வடகிழக்கு மாநிலங்களில் பாஜக., தன் பார்வையைப் பதித்தது. வடகிழக்கு மாநிலங்களில் பழங்குடியினரிடையே கிறிஸ்துவ மத மாற்றத்தை நிகழ்த்தி, பழங்குடியினரை நாட்டுக்கு எதிராக பிரிவினை வாதிகளாக மாற்றி வந்த நிலையை சரி செய்யும் எண்ணத்துக்கு பாஜக., வந்தது. அதற்கு அதே பழங்குடியினருடன் நெருக்கம் காட்டும் யோசனையைக் கைக் கொண்டது.

மேகாலயாவில் ஆர்.எஸ்.எஸ் பிரசாகராக இருந்த சுனில் தியோதர் திரிபுரா மாநிலத்துக்கு பாஜக., சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அனுப்பப் பட்டார். இவர் பாஜக., சார்பில் அம் மாநிலத்தில் தீவிரமாகக் களம் இறங்கினார். 2014 தேர்தலில் வாராணசியில் மோடிக்காக பிரசாரம் செய்தவர் இவர்.

இதனிடையே, வட கிழக்கு மாநில மக்களுக்கு தாங்கள் இந்தியாவின் அங்கம் என்ற கருத்தோட்டம் வளர்வதற்கு அம்மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தியது. அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மத்திய அரசில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப் பட்டன. ரயில்வே துறை, சாலைகள் கட்டுமானம், பாலங்கள், விவசாயம், வேலைவாய்ப்பு முன்னுரிமை, வட கிழக்கு மாநிலத்தவர் நாட்டின் மற்ற பகுதிகளில் வேலை வாய்ப்புக்காக வரச் செய்வதில் முன்னுரிமை என்று பாஜக., தீவிரத் திட்டங்களை அமல்படுத்தியது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு இதன் ஓர் அங்கமாக விளங்கினார்.

இதை அடுத்து தனி மாநிலம் கோரி போராடும் பழங்குடியினர் கட்சியான ஐபிஎஃப்டி கட்சியுடன் கூட்டணி வைத்து, தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்கான முயற்சிகளை பாஜக., எடுத்தது. நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை அதிக அளவில் இருக்கும் மாநிலம் என்றால் அது திரிபுரா தான். வடகிழக்கு மாநிலங்களில் திரிபுராவில் 19.7 சதவீதம் வேலைவாய்ப்பின்மை! அஸ்ஸாமில் 18.1 சதவீதம் என்று வேலைவாய்ப்பின்மை குறித்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

திரிபுராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா கடந்த 25 ஆண்டுகளாக திரிபுராவை மார்க்சிஸ்ட் கட்சி முடக்கி வைத்துள்ளதாகக் கூறினார். மாநிலத்தில் நிலவும் வேலைவாய்ப்பின்மைக்கு இடது சாரி அரசே காரணம் என்றார்.

திரிபுராவில் நிகழ்த்தப் படும் வன்முறைகளும், வேலை வாய்ப்பின்மையும் அம்மாநில மக்களை வெகுவாக யோசிக்க வைத்துள்ளது.

இதே நிலைதான் கேரளத்திலும் உள்ளது. கேரளத்தில் பாஜக., மாதந்தோறும் கம்யூனிஸ்ட்களின் வன்முறைக்கு தங்கள் கட்சித் தொண்டர்களை பறிகொடுத்து வருகிறது. எனவே இதே போன்ற நிலை ஒரு நாள் கேரளத்திலும் ஏற்படக் கூடும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe