சென்னை:
திருச்செந்தூர் கோவிலில் பெண்மணியை தகாத வார்த்தைகளால் ஏசிய அய்யாக்கண்ணுவை கைது செய்யக் கோரி தென் சென்னை பாஜக., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று, திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் விவசாயிகள் சங்கத்தின் அய்யாக்கண்ணு. அப்போது கோயில் வளாகத்தில் நோட்டீஸ் கொடுக்கக் கூடாது என்று தடுத்தார் உள்ளூர் பாஜக., நிர்வாகியான நெல்லையம்மாள்.
ஆனால், அய்யாக்கண்ணு அந்தப் பெண்ணை தகாத வார்த்தையால் திட்டியதுடன் அடிக்கவும் கை ஓங்கினார். இதை அடுத்து அந்தப் பெண்ணும் பதிலுக்கு கையை ஓங்க, அங்கே தொடர்ந்து கைகலப்பும் வாக்குவாதமும் ஏற்பட்டது. ஆனால், அய்யாக்கண்ணு தொடர்ந்து தகாத வார்த்தையால் அப்படித்தான் பேசுவேன் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார். மேலும், தன்னுடன் வந்த சிலருடன் அந்தப் பெண்ணைத் தாக்கத் தொடங்கினார். இதனால் ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தனது செருப்பைக் கழற்றி காட்ட வேண்டிய சூழல் வந்தது.
இதனிடையே, தனியாக வந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசி நடந்து கொண்ட அய்யாக்கண்ணுவை கண்டித்தும் கைது செய்யக் கோரியும் பல்வேறு மட்டத்தில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப் பட்டன. ஆனால், ஊடகங்கள் அந்தப் பெண் ஏதோ அய்யாக்கண்ணுவை அடித்து விட்டது போல், தவறாக செய்தியை ஒளிபரப்பின.
இந்நிலையில், அய்யாக்கண்ணுவை கண்டித்து, தென்சென்னை மாவட்ட பாஜக., தலைவர் டால்பின் பா.ஸ்ரீதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். என்ன நடந்தது, ஏன் பிரச்னை என்பது குறித்து பாஜக.,வின் ஓமாம்புலியூர் ஜெயராமன் கண்டன உரை நிகழ்த்தினார். இருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து, சைதை காவல் நிலையம் பின்புறமுள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலை 6.30 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப் பட்டனர்.