திருவள்ளூர்: தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஊழல் செய்து மலையளவு பணம் குவித்து வைத்துள்ளனர். தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த முதல்வர்கள் இருந்த காலம் மாறி சிபிஐ விசாரணைக்கு உள்ளான முதல்வர் பதவியில் நீடிப்பது வெட்கக்கேடு என்று பாமக., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பாமக சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியவை…
வாக்காளர்கள் நேர்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்! வாக்குக்கு பணம் கொடுக்க வரும் வேட்பாளரிடம் இந்த பணம் எப்படி வந்தது என கேள்வி எழுப்ப வேண்டும்!
தற்போது உள்ள தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் செய்து சேலம் மலை, திருவண்ணாமலை போன்று மலையளவு பணத்தை குவித்து வைத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து கன்னியாகுமரி வரை சாலை வழியே 10 அடி உயரத்திற்கு 2000ரூபாய் நோட்டுக்களை அடுக்கி வைக்கும் அளவிற்கு அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.
மக்கள் நல்வாழ்வு, சாலை, சுகாதாரம், பாதாள சாக்கடை திட்டம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு செலவு செய்ய வேண்டிய தொகையில் 75% கொள்ளையடித்து ஊழல் செய்துள்ளர்.
கடந்த ஓராண்டில் 600 மதுக்கடைகளை திறந்துள்ளது இந்த ஆட்சியின் அவலம். இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் ஊழலில் 3வது இடத்தை பிடித்து தமிழக அரசு சாதனை படைத்துள்ளது.
இந்த அமைச்சர்கள் மீதான ஊழல்கள் குறித்து பாமக சார்பில் கவர்னரிடம் ஊழல் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை!.
காமராஜர் போன்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்த முதல்வர்கள் இருந்த நிலை மாறி சிபிஐ விசாரணைக்கு முதல்வர் உள்ளாகியுள்ளது வெட்கக்கேடு! அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
விவசாயத்திற்கு இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுவதில்லை! விதைகள் கிடைப்பதில்லை! ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்படாமல் உள்ளன என்று ராமதாஸ் குற்றம் சாட்டினார்!