சென்னை: இரு வருடங்களுக்கு முன்பு வரை ஸ்டாலினை கொலைகாரன் என்று சொல்லிக் கொண்டிருந்த மதிமுக., பொதுச் செயலர் வைகோ, திடீரென மனம் மாறி ‘முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே…!’ என்று தாம் விளிக்கும் காலம் வந்துவிட்டதாகக் கூறி மயிர்க்கூச்செறிந்தார்.
அதே பாணியில், ராகுல் காந்தியை வருங்கால பிரதமர் அவர்களே என்று விளிப்பதற்காக, மு.க.ஸ்டாலின் அவரை கூட்டணியின் சார்பில் முன்னிறுத்தி பகிரங்கமாக அறிவித்துவிட்டார்..! ஆனால் அவர் அறிவிப்புக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது.
காங்கிரஸ் தற்போது மாநிலக் கட்சிகளுடன் போட்டியிடும் அளவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. சொல்லப் போனால், திரிணமுல் காங்கிரஸ், தெலுகு தேசம் என கூட்டணிக் கட்சிகளுடனேயே எண்ணிக்கையில் போட்டியிடும் அளவுக்கு வளர்ச்சி கண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை விட ஒரு எம்.பி. கூடுதலாகப் பெற்றால் கூட, கூட்டணி எனும் கூட்டாட்சியில் தாமே பிரதமராக வந்துவிடலாம் என சந்திரபாபு நாயுடுவும் மம்தா பானர்ஜியும் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், ஸ்டாலினையே வருங்கால துணை பிரதமர் என்ற ரேஞ்சுக்கு அழைத்துவிட்டுச் சென்றிருக்கிறார் சந்திரபாபு நாயுடு!
இப்படி ஒரு சூழ்நிலையில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்ததில், கூட்டணிக்குள்ளேயே கடும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்குக் கூட முதலில் அழைக்கப் பட்டிருந்தவர் சோனியா மட்டுமே! ஆனால் திடீரென அழைப்பே இல்லாமல் ராகுல் காந்தி ஒட்டிக் கொண்டார் விமானத்தில்! அதற்குக் காரணம், இந்தக் கூட்டத்தை சாக்காக வைத்து, பிரதமர் வேட்பாளராக தம்மால் ராகுல் அறிவிக்கப் பட வேண்டும் என்று ஸ்டாலின் போட்ட கணக்குதான்!
இப்படி, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்பதில் எதிர்க்கட்சிகளிடையே, கருத்து வேறுபாடுகள் நிலவுவதை கருத்தில் கொண்டு, வழக்கம் போல் வாய்ஜால மாய்மாலம் காட்டும் வார்த்தைகளால் ஸ்டாலின் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார்! நாட்டைக் காக்க இணைந்திடுவோம் என்ற அவரது வேண்டுகோள் எத்தனை பேர் செவிகளை அடைந்திருக்கும் என்பது தெரியாது!
முன்னதாக, தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஒவ்வொருவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு; மத்தியில் தற்போதைய அரசை வீழ்த்தி ஆட்சி அமைக்கும் மாற்று அரசின் பிரதமர் யார் என்பதை, தேர்தலுக்குப் பின்பு தான் முடிவு செய்ய வேண்டும் என்று பளிச்செனக் கூறிவிட்டார்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தேர்தலுக்கு முன்பே முன்நிறுத்துவது, முதிர்ச்சியற்ற முடிவாக முடிந்துவிடும் என திரிணாமுல் காங்கிரஸ் பொட்டிலடித்தாற்போல் கூறிவிட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியும் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் தங்களுக்குள்ள தயக்கத்தை வெளிப்படுத்திவிட்டது.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் கோட்டையாக விளங்கிய மூன்று மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டிய ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தான், மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலேயே உரக்கச் சொன்னதாக ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறார்.
மோடி அரசை வீழ்த்த, ஜனநாயக படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையிலேயே ராகுல்காந்தியை முன்மொழிந்ததாகவும், நாசக் கரத்தை வீழ்த்தி, நாட்டைக் காத்திட நேசக் கரங்களாய் இணைந்திடுவோம் என்றும் அவர் விடுத்துள்ள வேண்டுகோளை எல்லாம், மற்ற கட்சியினர் முன்னரே யோசிக்காமலா இருந்திருப்பார்கள்?!