மூன்றாவது அணியில் அதிமுக இடம்பெறுவதற்கு சந்திர சேகர ராவ் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலை சாய்த்திருப்பதாகவும், இதன் மூலம், பாஜக.,வுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று திட்டமிட்டிருப்பதாகவும் கூறப் படுகிறது.
தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பே சென்னை வந்த சந்திரசேகர ராவ், ஸ்டாலினிடம் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு, மூன்றாவது அணி தொடர்பாக பேச்சு நடத்தினார், ஆனால், ஸ்டாலின் காங்கிரஸுடன் தான் உறவு என்று தீர்மானித்துவிட்டதால், மூன்றாம் அணி முயற்சிக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.
தற்போது, தெலங்கானா தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள சந்திர சேகர ராவ், இம்முறை அந்த வெற்றி தந்த உற்சாகத்தில், மீண்டும் மூன்றாவது அணி முயற்சியை தொடங்கியுள்ளார். காங்கிரஸ், பாஜக., அல்லாத அணி என்றும், மாநிலக் கட்சிகளின் கூட்டணி என்றும் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு மாநிலக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து, கூட்டணி குறித்து பேசி வருகிறார்.
இதற்காக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரப் பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இவர்களுடன் பேசி, ஓரளவு சரிக்கட்டி விட்டார். இந்நிலையில் திக்குத் தெரியாமல் திண்டாடும் அ.தி.மு.க.,வை, மூன்றாவது அணியில் இடம் பெறச் செய்யும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக, ஈபிஎஸ் -ஓபிஎஸ் இருவரையும் சந்தித்துப் பேச, தன் கட்சி எம்.பி., மூலமே தொடர்பு கொண்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இந்தக் கூட்டணியால், பெரிய அளவில் சாதிக்க முடியும் என்று எண்ணும் சந்திரசேகர ராவ், பலம் வாய்ந்த மாநிலக் கட்சிகளை ஓரணியில் திரட்டும் தன் முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறார்.
அதிமுக., எம்.பி.க்களிடம் தெலங்கானா எம்.பி.க்கள் பேசிவருவதாகக் கூறப் படுகிறது. சந்திரசேகர ராவுடனான சந்திப்பை எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார் என்றும், இதன் மூலம், பாஜக.,வுடனான கூட்டணியை அதிமுக., விரும்பவில்லை அல்லது, நெருக்கடி கொடுப்பது என்பதை அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்த முனைகிறார்.
அதிமுக.,வில் டிடிவி தினகரன் சொல்லி வருவது போல், “ஸ்லீப்பர் செல்கள்’ சிலர் உள்ளதால், சசிகலா ஆதிக்கத்தை அதிமுக.,வில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக தம்பிதுரை உள்ளிட்ட சிலர் பாஜக.,வுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்காகவே தினகரனையும் அதிமுக.,வில் மீண்டும் இணைக்க வேண்டும், பலம் வாய்ந்த அதிமுக.,வை உருவாக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணி என, பா.ம.க., – தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை இணைத்து, அதிமுக.,வே தலைமை ஏற்கும் நிலை வரலாம் என்றும், திமுக.,வுடன் கூட்டணி சேர இயலாத கட்சிகள் இந்த மூன்றாவது அணியில் இணையும் என்றும் அரசியல் கணக்குகள் இப்போது துளிர்விடத் தொடங்கியுள்ளன.