பாஜக.,வின் மிக மூத்த தலைவரான லால்கிஷன் அத்வானி மீண்டும் தேர்தல் அரசியலில் ஈடுபடக் கூடும் என்று தெரிகிறது. ம.பி., ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக., பெற்ற நூலிழைத் தோல்வி, அக்கட்சியின் தலைமை மட்டத்தில் சுயபரிசோதனை மேற்கொள்ளத் தூண்டியிருக்கிறது.
குஜராத்திகளான மோடியும், அமித் ஷாவும் பாஜக.,வை முழுமையாக ஆக்கிரமித்திருக்கின்றனர் என்ற குற்றச்சாட்டின் பின்னணியில், தொடர்ச்சியாக தேர்தல்களில் அபார வெற்றி பெற்று வந்த பாஜக., அண்மையில் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தல்களில், வாய்ப்பு இருந்த 3 மாநிலங்களில் நூலிழையில் தோல்வியைப் பெற்றது.
இது கட்சியினர் மத்தியில் மீண்டும் பழைய உத்வேகத்துடன் வெற்றியைத் தட்டிப் பறிக்கும் உத்வேகத்தை அளித்துள்ளது. அதற்காக, தங்களை சுயபரிசோதனை செய்து வரும் பாஜக., தலைமை, கட்சியில் பலராலும் அதிருப்தியுடன் கூறப்பட்ட மூத்த தலைவர்களை ஓரங்கட்டி வைத்திருக்கும் போக்குக்கு முடிவு கட்ட எண்ணி வருகின்றனர்.
உடல் நலக் குறைவால் வாஜ்பாய் இரு தேர்தல்களுக்கு முன்பே ஒதுங்கினார். 2004 தேர்தலில் எல்.கே. அத்வானி தலைமையில் கட்சி தேர்தலை சந்தித்தது. ஆனால், அத்வானியின் தலைமைக்கு அவ்வளவாக ஆதரவு கிட்டவில்லை. விளைவு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அதன் பின்னர் சரியான தலைமையில் தேர்தலை பாஜக., அணுக இயலாத நிலையில், 2014ல் மோடி முன்னிறுத்தப் பட்டார். அதன் பின்னர், கட்சிக்கு வெற்றிகள் தொடர்ந்தன. வணிக சமூகமான குஜராத்தியரின் வியாபாரப் பார்வையே இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்று கூறப் பட்டது. ஆனால் அண்மை சறுக்கல், இப்போது கட்சியில் அனைத்துத் தரப்பையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை தலைமைக்கு அளித்துள்ளது என்று கூறப் படுகிறது.
இந்நிலையில், பாஜக.,வில் மேல்மட்டத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பழம்பெரும் தலைவர்கள் அத்வானியும் ஜோஷியும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்வானி, ஜோஷி இருவருக்குமே வயது 80ஐக் கடந்துவிட்டது. இப்படி வயதாகிவிட்டதாலும், கட்சியில் இளம் ரத்தம் பாய்ச்சப் பட வேண்டும் என்பதாலும், மூத்த தலைவர்களான இருவரும் ஓரங்கட்டப் பட்டனராம். இந்நிலையில் கடந்த தேர்தலில், தன் தொகுதி வாராணசியை மோடிக்காக ஜோஷி விட்டுக் கொடுத்தார். கான்பூர் தொகுதிக்கு மாறிக் கொண்டு, வெற்றி பெற்றார். 5 முறை குஜராத் காந்திநகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எல்.கே.அத்வானியோ தீவிர கட்சிப் பணிகள் எதிலும் ஈடுபடாமல், ஒதுங்கியே இருந்து வருகிறார்.
ஆயினும், அத்வானியை வைத்து அவ்வப்போது சர்ச்சைகள் வெடித்துதான் வந்திருக்கின்றன. அத்வானிக்கு மோடி மரியாதை வழங்கவில்லை, கையெடுத்து வணங்கவில்லை, காலில் விழவில்லை, கண்டும் காணாதது போல் சென்று இன்சல்ட் செய்தார் என்றெல்லாம் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, பிரச்னையைக் கிளப்பி வந்தன ஊடகங்கள்!
இந்நிலையில், கட்சியில் துவக்க காலம் முதலே இருக்கும் மூத்த உறுப்பினர்கள், தங்கள் அதிருப்தியை அமித் ஷாவிடம் அவ்வப்போது தெரிவித்து வந்தார்கள். கட்சிக்காக கடுமையாக உழைத்தவர்கள், பிரச்னைகள் வந்த போதெல்லாம் துணிந்து முன் நின்று சந்தித்தவர்கள், தியாகம் செய்தவர்கள் என்றெல்லாம் கூறப்படும் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட மூத்தவர்களையும் கட்சித் தலைமை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறப் பட்டது. இதை அடுத்து, கட்சித் தலைமை குறித்து விமர்சனம் செய்பவர்களின் வாயை அடைக்கவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் இவர்களுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க பிரதமர் மோடியும் கட்சித் தலைவர் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனராம்!
மிக மூத்தவர்களான தங்களுக்கு கட்சியில் அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து போனதாக மனவருத்தத்தில் இருக்கும் இவர்கள் இருவரின் மனவருத்தம் போக்கவும், அதன் மூலம், கட்சியின் நம்பிக்கையுள்ள பழைய விசுவாசிகளின் நம்பிக்கையைப் பெறவும் இருவரும் முயற்சி செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் போட்டி வேறுவிதமாக இருக்கக் கூடும் என்பதாலும் கூட்டணிகளால் நெருக்கடி அதிகரிக்கும் என்று கருதப் படுவதாலும், கட்சிக்குள் சிக்கல்கள் இல்லாமல் பலம் பொருந்திய அளவில் தேர்தலை எதிர்கொள்ள இருவரூம் நினைக்கின்றனராம். எனவே, புதிய நபர்களுக்கு இடம் கொடுப்பதுடன், பெரியவர்களை புறம்தள்ளவும் கட்சி தயாராக இல்லை. எந்தவிதமான சோதனை முயற்சிகளிலும் ஈடுபடாமல், வெற்றி பெறுவது ஒன்றே குறிக்கோள் என்பதால், சில அதிரடி முடிவுகள் கட்சியின் உயர் மட்டத்தில் எடுக்கப் பட்டு வருவதாகக் கூறுகின்றனர்!!
ஏற்கெனவே, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய மூத்த பெண் தலைவர்கள் தங்கள் உடல்நிலையைக் காரணம் காட்டி வரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியுள்ளனர். ஆனால், மற்ற மூத்த தலைவர்கள் இப்போதும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால், அந்த விருப்பத்தைப் புறம் தள்ள வேண்டாம் என்று தலைமைக்கு இரண்டாம் கட்ட தலைவர்களும் தொண்டர்களும் எடுத்துக் கூறியுள்ளனர். இந்த யோசனைகளை தலைமை செவிமடுக்கும் என்று தெம்புடன் கூறுகின்றனர் பாஜக.,வினர்!