:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையும் விவகாரமும் இப்போது மேலும் சூடுபிடித்துள்ளது. சுகாதாரச் செயலர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களையும் குற்றம்சாட்டி சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேட்டி அளிக்க, அதனால் தலைமைச் செயலக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுவாகச் சென்று, முதல்வரிடம் மனு கொடுக்க.. இந்த விவகாரம் மேலும் பெரிதாகியுள்ளது.
அதன் பின்னர், டிடிவி தினகரன் அதிகாரிகளுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசப் போக, இப்போது மீண்டும் தனது வார்த்தைகளை அளந்து அளந்து விட்டிருக்கிறார் சட்டம் சிவி சண்முகம்.
இன்று அவர் செய்தியாளர்களிடம் காரசாரமாகப் பேசியது, பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, எங்களுக்கும் பேசத் தெரியும், நீ யார்? வேலைக்காரன் தானே.. வேலைக்காரனாக வந்தவன் வீட்டு உரிமையைப் பறித்துக் கொண்டாய் என்றெல்லாம் சொல்லி, தினகரை ஒரு வாங்கு வாங்கினார் சிவி சண்முகம்.
இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசியவற்றில் இருந்து…
இன்றைக்கு அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்றால் அது மாண்புமிகு அம்மா அவர்கள் போட்ட பிச்சை. அவர்களுடைய உயிரைத்தான் எங்களால் காப்பாற்ற முடியவில்லை எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை செய்ய முடியாமல் ஊமையாக இருந்து விட்டோம் அது மிகப் பெரிய பாவச்செயல்
ஆனால் இப்போது அம்மா அவர்களுடைய மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன என்கிறார்கள். நாங்கள் அமைத்த ஆணையம் விசாரிக்கிறது என்று ஆணையத்தின் மூலம் உண்மை வரும் என்று நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
அன்று ஒன்றும் கேட்கவில்லை வாய்மூடி இருந்தீர்கள் இன்று கேட்கிறீர்கள் என்று சொன்னால், ஆணையம் என்றால் அரசாங்கம் அமைத்திருக்கிறது அதன் மூலம் பல்வேறு உண்மைகள் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்! நடுவிலே ஆணையமே இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகின்றது! இப்படிப்பட்ட சந்தேகங்களை எழுப்புகின்றது!
அதுவும் பத்திரிகைகளில் ஊடகங்களில் சந்தேகங்கள் வெளிவந்த பிறகு அம்மா அவர்களுடைய தொண்டன் என்ற பெயரில் நான் அந்த சந்தேகங்களை மேற்கோள் காட்டி சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்! அதற்கு பதில் சொல்ல முடியாதவர்கள் இன்றைக்கு ஒரு பதில் சொல்லி இருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டு அரசு அதிகாரிகளை கேள்வி கேட்பார்களா அரசு அதிகாரிகளை பார்த்து குற்றம் சொல்வார்களா அமைச்சர் இப்படி பேசலாமா என்று கேட்கிறார்கள்
சந்தேகம் என்று வந்துவிட்டால் தவறு என்று வந்துவிட்டால் குற்றச்சாட்டு என்று வந்து விட்டால் அது சாதாரண மக்களாக இருந்தாலும் சரி அமைச்சராக இருந்தாலும் சரி அது சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் சரி எவ்வளவு பெரிய உயர் பதவிகளை வகித்தவர்களாக இருந்தாலும் சரி அந்த சந்தேகத்தை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கின்ற உரிமை இந்திய அரசியல் சட்டத்தில் அனைத்து சாதாரண மக்களுக்கும் இருக்கிறது
கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வதற்கு இது ஹிட்லர் நாடு அல்ல. கேள்வி கேட்கும் உரிமை அனைவருக்கும் உண்டு ஆனால் அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு என்ன பேசுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர் முறையிட சம்பந்தப்பட்டவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு! அதை ஏற்றுக்கொள்கிறேன்! முறையிடக் கூடாது என்று நான் சொல்லவில்லை கண்டிப்பாக உண்டு… ஆனால் சொல்கின்றபோது பயன்படுத்தும் வார்த்தையில் கவனம் இருந்திருக்க வேண்டும்.
ஐஏஎஸ் படித்தவர்கள் எழுதிய வார்த்தைகள்… நாங்களெல்லாம் சாதாரணர்கள் படிக்க தெரியாதவர்கள்… ஏதோ எடுத்து வந்து விட்டோம் என்று நினைப்பவர்கள்!
இவர்கள்தான் படித்தவர்கள்! அந்த மனுவில் சொல்லப் பட்டிருக்கின்ற அந்த வார்த்தைகளை முறையாக பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்
கொடுக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை; கொடுக்கலாம்; கோரிக்கை வைக்கலாம்! எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! ஆனால் சொல்ல வார்த்தைகள் என்ன என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை அச்சுறுத்துகின்ற விதமாக அதிகாரி அரசு பணி செய்கின்ற அதிகாரி அமைச்சர்களை கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் இது எங்கே செல்கிறது என்பதை கண்டிப்பாக அந்த சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்
இது சரியில்லை! தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன்! எங்களுக்கும் பேச தெரியும் ஆகவே இது முறையல்ல! சமூகநீதி விளைவித்த நாடு! இது கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை!
அம்மாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது யார்? யார் மீது சந்தேகம் என்று நீங்கள் கேட்டீர்கள்? அம்மாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது யார்? மருத்துவமனையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது யார்? அவர்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும் என்று சொன்னேன்
அவர் யாரென்று பார்த்தால் டிடிவி தினகரன்! வக்காலத்து வாங்குகிறார்கள் வரிந்து கட்டிக் கொண்டு ஓடி வருகிறார்கள் டிடிவி தினகரன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார்! உனக்கு மட்டும்தான் பேசத் தெரியும் என்று நினைக்காதே! உனக்கு மட்டும்தான் வாய் இருக்கிறது என்று நினைக்காதே. நாங்கள் பேசினால் நீ தாங்க மாட்டாய்.
எந்தக் குடும்பத்தை குற்றச்சாட்டு சொல்கிறோமோ அவர்கள் வரிந்துகட்டிக்கொண்டு திருடன் திருடன் என்று சாட்சி சொல்ல வருகிறார்கள்… டிடிவி தினகரன் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்! உனக்கு மட்டும் தான் பேசத் தெரியும் என்று நினைக்காதே உனக்கு மட்டும்தான் வாய் இருக்கிறது என்று நினைக்காதே நாங்கள் பேசினால் நீ தாங்க மாட்டாய்! மரியாதையாக பேச கற்றுக் கொள்
ஆட்டம் பாட்டம் எல்லாம் உன் உல்லாச பங்களாவில் வைத்துக்கொள்! அந்த மயக்கத்தில் இருந்து தெளிந்து வந்து பேச வேண்டும்! எனக்கும் பேச தெரியும்! நாங்கள் அண்ணா திமுக வின் அடி மட்ட தொண்டர்கள். அத்தனை உரிமைகளும் எங்களுக்கு இருக்கிறது~! அடிமட்ட தொண்டர்கள் நாங்கள். நீ அந்த வீட்டுக்கு எடுபிடி வந்த வேலை செய்ய வந்தவன்!
வேலைக்காரர்கள் தான்… நீங்கள் வேலைக்காரர்களாக வந்தவர்கள் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் நீங்கள் அம்மாவின் உயிரை பறித்தவர்கள் நீங்கள்
அம்மா சிறைக்குச் செல்வதற்கு முழுக்க முழுக்க காரணம் நீயும் உன் குடும்பமும்தான் அதை மறந்துவிட்டு பேசாதே… என்று கடும் கோபத்துடனும் காட்டத்துடனும் சொல்லிவிட்டு நகர்ந்தார் அமைச்சர் சிவி சண்முகம்!
அந்த காணொளிக் காட்சி இங்கே…