பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்த்துப் பேசியபோது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத்திலேயே இந்த சட்டத்தை நிறைவேற்ற இருப்பதாக தெரிய வருகிறது.
தேர்தலை கருத்தில் கொண்டு இப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முன்னேறிய வகுப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது சமூகநீதி கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதை நிறைவேற்றினால் பின் தங்கிய மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைக்கு எதிராக அது அமையும்.
தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கருணாநிதி பெற்றார். வேலைவாய்ப்பு மட்டுமின்றி கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெறப்பட்டது. மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அமைந்த இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பிற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பயன் பெற்றார்கள். பின்னர் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ரத்து செய்தது. அந்த நீதிபதிகளில் ஒருவரான ரத்தினவேல் பாண்டியன் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் 69 சதவீத இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகிறார்கள். தமிழ்நாடு இதை அமல்படுத்துவதில் வெற்றி கண்ட மாநிலமாக இருக்கிறது. பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கட்டி காத்த சமூகநீதிக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது. மத்திய அரசு நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறது. தமிழக அரசு இந்த இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்ப்பதுடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பேசினார் ஸ்டாலின்.
இதன் மூலம் தமக்கு பொதுப்பிரிவினரின் ஓட்டுகள் தேவையில்லை என்பதை ஆணித்தரமாக அவர் கூறியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் தெரிவிக்கப் பட்டு வருகின்றன.
பொருளாதார ரீதியாக வறுமை நிலையில் இருக்கும் எவருக்கும் அவர்கள் பொருளாதார ரீதியாக ஓரளவு முன்னேற்றம் பெற்று வாழ்வதற்கான உரிமைகள் உள்ளன. அவற்றை நசுக்கும் விதத்தில் ஸ்டாலினின் கருத்துகள் உள்ளது பொதுப்பிரிவினர் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தமிழ்நாட்டின் பெரும் பணக்காரர்களாகவும் கொள்ளைக் காரர்களாகவும் உருவெடுத்துள்ள மு.கருணாநிதி குடும்பத்தினருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் ஏழைகளின் வாழ்க்கைப் போராட்டம் குறித்து எந்த அக்கறையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது என்று கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.