திருப்பதி: கடந்த 14 மாதம் 3648 கிலோ மீட்டர் பாத யாத்திரை மேற்கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி. ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தில் தனது பாத யாத்திரையை நேற்று நிறைவு செய்தார்.
பின்னர் அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி. செய்யப்படும் என்றும், ஒவ்வொரு கிராமத்திற்கு ஒரு கிராம தலைமை செயலகம். 50 வீட்டிற்கு ஒரு தன்னார்வலர்கள். … என்று பாதை யாத்திரை நிறைவு மாநாட்டில் பேசினார்.
ஆந்திர எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2017 நவம்பர் 6ஆம் தேதி கடப்பா மாவட்டம் இடுப்புல பாவில் உள்ள தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி சமாதியில் இருந்து பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரையை தொடங்கினார். 341 நாட்கள் நடை பெற்ற யாத்திரையில் 3648 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்டு ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களை சந்தித்த அவர் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இச்சாபுரத்தில் தனது பாத யாத்திரையை இன்று நிறைவு செய்தார். ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரையை நி்றைவு நிகழ்சியை முன்னிட்டு இச்சாபுரத்தில் அமைக்கப்பட்டு பாதயாத்திரை நினைவுத்தூண் அருகே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி,காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி 3 ஆயிரத்து 440 கிலோ மீட்டர். ஆனால் நான் 3648 கிலோ மீட்டர் பாதை யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்தேன்.எத்தனை கிலோமீட்டர் பாதையாத்திரை மேற்கொண்டோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு மக்களை சந்தித்தேன், அவர்களில் எத்தனை பேருக்கு ஆறுதல் அளித்தேன் என்பதே முக்கியம்.
மாநிலத்தில் 23 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, பள்ளிக்கூடங்களில் புத்தகங்களும் வழங்கப் படவில்லை.
இதனால் பெற்றோர்கள் தனியார் பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் தனது பினாமி அமைச்சரின் நாராயண மற்றும் சைதன்யா கல்வி நிறுவனத்திற்கு லாபம் சேர்க்கும் விதமாக சந்திரபாபு நாயுடு செயல்படுகி்றார்.
ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தில் பொது மக்களுக்கு வைத்திய சேவை வழங்கிய மருத்துவமனைகளுக்கு கடந்த 8 மாதங்களாக அரசு பணம் கொடுக்கவில்லை. ஜென்ம பூமி திட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் ஊழ்ல் நடைபெற்று வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் மாவட்டங்களின் எண்ணிக்கையை 13 ல் இருந்து 25 ஆக உயர்த்துவோம்.
ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும். மாவட்ட ஆட்சியர்களை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வோம். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம தலைமை செயலகம் ஏற்படுத்தப்படும். அவற்றில் உள்ளூரை சேர்ந்த 10 பேருக்கு வேலை வழங்கப்படும். மக்கள் நல திட்டங்கள் ஒவ்வொரு ஏழையின் வீட்டிற்கும் பலன் கிடைக்கும் வகையில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்
50 வீட்டிற்கு ஒரு கிராம தன்னார்வலரை நியமனம் செய்து அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். கிராம தன்னார்வலர்கள் கிராம தலைமைச் செயலகத்துடன் இணைக்கப்படுவார்கள்.
ரேஷன் பொருள்கள் அனைத்தும் நேரடியாக வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும். விவசாயதிற்கு பகல் நேரத்தில் ஒன்பது மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயிகளின் வருவாய் உயர நடவடிக்கை எடுப்போம். விவசாயிகள் வட்டியில்லா கடன் பெற ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகள் அனைவருக்கும் இலவசமாக ஆழ்துளை கிணறு ஏற்படுத்தி கொடுப்போம். விவசாய காப்பீடு தொகை அனைத்தும் அரசே ஏற்கும்.
மீன் பண்ணைகளுக்கு ஒன்னரை ரூபாய்க்கு யூனிட் மின்சாரம் வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு குளிர்பதன கிடங்கு ஏற்பாடு செய்யப்படும். இன்று ஒரு லிட்டர் பால் விவசாயிகள் 26 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில் சந்திரபாபு நாயுடு தனது ஹெரிடேஜ் பால் நிறுவனம் ஒரு லிட்டர் பாலை 45 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.
பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு 4 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். கூட்டுறவு பால் பண்ணைகளை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கொண்டு வரப்படும். விவசாய டிராக்டர்களுக்கு சாலை வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இயற்கை பேரிடர்களின் போது நஷ்டம் அடையக் கூடிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நான்காயிரம் கோடி ரூபாயில் ( 2000 கோடி ரூபாய் மாநில அரசு+ 2000 கோடி ரூபாய் மத்திய அரசு ) தனி நிதியம் உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ஒய்.எஸ்.ஆர் பீமா திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும். அந்த இழப்பீட்டு தொகையை முழுவதுமாக பெண்களுக்கு வழங்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்படும். அப்படி வழங்கப்படும் இழப்பீடு மூலம் கிடைக்கும் பணத்தை அவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் வாங்கி கொள்ள இயலாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நீர்ப்பாசன திட்டங்கள் போர்க்கால வேகத்தில் செயல்படுத்தப்படும்.ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை. எனது மக்கள் நல திட்டங்களின் பலன்கள் அனைத்து குடும்பத்திற்கும் கிடைத்து எனது புகைப்படம் அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை. 14 மாதம் மக்கள் உடன் பாத யாத்திரை மேற்கொண்டு அவர்களின் கஷ்டங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டேன்.
அவர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். அனைவருக்கும் நல்லது நடக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். சீர் கெட்ட நிலையில் இருக்கும் அரசியலை மாற்றுவதற்காக புறப்பட்டுள்ளேன். உங்கள் மகனாக அனைவரும் என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.
பிரஜா சங்கல்ப யாத்திரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். ஆனால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம் உள்ளது.காலமும் மாறும் காட்சிகளும் மாறும் என அவர் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.