அடுத்த ஆண்டு முதல் கல்வி வேலைவாய்ப்புகளில் உயர்ஜாதி விகிதாசார முறை என்று தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அறிவிப்பு என்ற தலைப்புடன் அன்றைய (1979) நாளிதழ் செய்திகள் மின்னின! காரணம் எம்ஜிஆர் உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீட்டு முறை தேவை என்று அன்றே வலியுறுத்தினார்! இது குறித்து அவர் பொதுக்கூட்டத்திலும் அடிக்கடி பேசி வந்தார்! ஆனால் எம்ஜிஆரை போற்றுவதாக கூறிக் கொண்டிருக்கும் அதிமுக இந்த முறை அவரது கனவை நிறைவேற்றாமல் அவரது வார்த்தைக்கு எதிராக இட ஒதுக்கீட்டு முறையில் நாடாளுமன்றத்தில் எதிர்த்துப் பேசி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளியேறியது!
அன்றைய இன்னொரு செய்தி: ஏழைகள் எந்த ஜாதியில் இருந்தாலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுரை கூறியிருந்தார்! முன்னேறிய வகுப்பினர் மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என எந்த பிரிவில் ஏழை எளியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது! பொருளாதார அந்தஸ்து அடிப்படையில் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதற்கு அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது
பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கு பொருளாதார மற்றும் சமூக அதிகாரம் அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது கண்டிப்பாக அவசியம் தான்! அதே நேரத்தில் முன்னேறிய வகுப்பில் உள்ள ஏழை எளியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கூறுவதால் அதை இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதாக கருத முடியாது
… இந்தப் பட்டியலைப் பார்க்கும்போது பெரும்பாலான சமூகத்தினர் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் சில சாதிகள் மட்டுமே முன்னேறிய வகுப்பில் வருகின்றன எல்லா சமூகத்தினரும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூகத்தினராக கருதி …. தற்போதைய இட ஒதுக்கீட்டுக்கு முன்னிருந்த இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றிருந்த பிரிவுகளில் விவரங்கள் என்ன என்றெல்லாம் கேள்விகள் கேட்டு இருந்தார் உயர்நீதிமன்ற நீதிபதி.
இட ஒதுக்கீடுகள் வராத பொதுப்பிரிவினர் பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழைகளுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது!
அந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டபோது அதிமுக எம்பி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக எதிர்த்துப் பேசினார்! அவர் பேசும்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எங்கள் தலைவர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் கொள்கைகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டார்
ஆனால் ஜாதி அடிப்படையை தாண்டி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர வேண்டும் என்ற கருத்தை முதலில் சொன்னவர் எம்ஜிஆர்! 1979 ஆகஸ்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் பேசுகையில் அடுத்த ஆண்டு முதல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்ஜாதி ஏழைகளுக்கு பொதுப் பிரிவில் உள்ள 51 சதவிகித இட ஒதுக்கீடு என்று பேசினார்
எம்ஜிஆர் உயர் ஜாதி என்பதால் இப்படி அக்கறை காட்டுவதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்தார். ஆனால் அந்த யோசனையை சென்னையில் ஆகஸ்ட் 12ல் அளித்த பேட்டியில் வரவேற்றார். அப்போது அவர் கூறியது…. பிராமணர் பிற்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் உட்பட எல்லா ஜாதியிலும் உள்ள ஏழைகளுக்கு பொதுப்படையாக உள்ள 51 சதவீதத்தில் இருந்து 15 முதல் 20 சதவீதம் வரை இட ஒதுக்கீடு வழங்கலாம்! இந்த யோசனையை அரசு ஏற்குமானால் பிரச்சினைக்கு இடமே இல்லை என்று கருணாநிதி கூறினார்! ஆனால் அந்த யோசனையை அதற்குப்பின் அரசு விவாதிக்கவில்லை!
இந்த விஷயங்கள் தெரியாமல் இப்போது அதிமுகவும் திமுகவும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருகின்றன! உயர் ஜாதியை சேர்ந்த ஏழைகளுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னதை பற்றி தெரிந்து கொள்ளாமல் அவரது கொள்கைக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த தம்பிதுரை தவறான கருத்தை மக்களவையில் பதிவு செய்துள்ளார்
அதேபோல் கருணாநிதி சொன்ன கருத்து தெரியாமல் அவர் மகன் ஸ்டாலின் ஏழைகளுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசி உள்ளார்..
இவை பழைய வரலாறு! வரலாறு தெரியாமல் இன்றைய காட்சிகளை மட்டுமே கண்ணில் கொண்டு செயல்படும் இவர்களின் செயல்பாடுகள், இன்றைய இளைஞர்களை ஏமாற்றும் பித்தலாட்டங்கள் என்று வருத்தப் படுகின்றனர் மூத்த தலைவர்கள்.
எம்.ஜி.ஆர். குறித்த செய்தியில் வெளிவந்தது… தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டிலிருந்து அதாவது 1980-81 கல்வி நிலையங்களில் மாணவர்களை சேர்த்தல் வேலை நியமனம் போன்றவற்றில் உயர்ஜாதி வகுப்பினர் இடையே பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு 51 சதவிகித பொது கோட்டாவில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அளிக்கப்படும் என்று புரட்சித்தலைவர் முதல்வர் எம்ஜிஆர் அறிவித்தார் என்று செய்தி கூறுகிறது