“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக க.மாதவன் நியமனம். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு. சில நியூஸ் மட்டும்தான் ‘சும்மா’ படிக்கும்போதே இப்படி சிரிப்பு மூட்டும்!”
தீபா – இவருக்கு இருக்கும் ஒரே தகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதுதான்! அதுவும் கூட, ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டார், குடும்ப பாரம்பரிய பழக்கவழக்கங்களை மறந்து, கிறிஸ்துவ பின்னணியில் சென்றார் என்பதெல்லாம் ஜெயலலிதா அவரை வெறுப்பதற்கு காரணிகளாயின.
ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட திடீர் வெற்றிடம், தீபாவை பெரிய ஆள் ஆக்கியது. அப்போது, சசிகலா குடும்பத்தினர் அதிமுக.,வை கபளீகரம் செய்ய அனைத்து வழிகளிலும் முயன்றபோது, சசிகலா குடும்பத்தினரை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள விரும்பாத அதிமுக.,வினர், ஜெயலலிதாவின் முக சாயலில் தெரிந்த ஜெ.தீபாவை அவரது வாரிசு போல் நினைக்கத் தொடங்கினர்.
அதனால், அதிமுக.,வைச் சேர்ந்த தலைவர்கள் சிலரே கூட தீபாவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினர்.
ஆனால்,. தீபாவின் தோற்றம், பின்னணி, செயல்பாடுகள், கணவருடனான பிரச்னை, இயக்கத்துக்கு அவர் வைத்த பெயர், டிரைவருடன் தகராறு, சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட முட்டல் மோதல்கள், போயஸ் தோட்ட வீட்டு விவகாரத்தில் தீபா நடந்து கொண்ட விதம் என பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் ஜெ.தீபாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்சம் மவுசையும் இழக்க வைத்தது.
இதனால், தீபா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் சிரிக்கவும், நகைக்கவும் தொடங்கி விட்டனர். இந்நிலையில், ஜெ.தீபா, தற்போது பொங்கல் சிரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தனது கணவர் மாதவனை எம்.ஜி.ஆர்., ஜெ.தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக நியமிப்பதாகவும், அனைத்து மாநில நிர்வாகிகளும் கழக உறுப்பினர்களும் மாதவனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் தீபா கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளுக்குக் கூட, நிர்வாகிகள் இல்லாமல், சிலவற்றுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க திணறி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இன்றைய சமூக வலைத்தள நகைச்சுவையாளர் ஆகி விட்டார் ஜெ.தீபா!