பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டம் கடந்த இரு தினங்களாக தில்லியில் நடைபெற்று வந்தது. இந்த இரு நாள் விழாவில் கடைசி நாளான நேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், காங்கிரஸ் ஊழல்வாதிகள் ஏன் சிபிஐ.,யை தங்கள் மாநிலத்தில் வர தடை விதித்துள்ளனர் என்பதை விளக்கமாகக் கூறினார்.
அவர் இது குறித்துக் கூறிய போது, “நான் குஜராத் முதல்வராக இருந்த போது, தங்கள் கைகளில் இருந்த ஒவ்வொரு துறைகளையும் கொண்டு தொடர்ந்து 12 ஆண்டுகள் என்னை வேட்டையாடினர். ஆனாலும் நான் குஜராத்தில் சி.பி.ஐ.க்கு தடை விதிக்கவில்லை.
ஆனால் எதிர்க்கட்சிகள் செய்வதை பாருங்கள். ஆந்திராவில், மேற்கு வங்கத்தில், சத்தீஸ்கரில்…! எந்தத் தவறை அவர்கள் மறைக்க விரும்புகிறார்கள்? – என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி!
மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த சந்திரபாபு நாயுடு திடீரென தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி, மோடிக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினார். மேலும், மோடிக்கு எதிராக மெகா கூட்டணி உருவாக்கப் போவதாகவும் கூறி செயல்படத் தொடங்கினார். தொடர்ந்து, சிபிஐ., ஆந்திர மாநிலத்தில் தன்னிச்சையாக செயல்படவும் தடை விதித்தார். இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் சந்தேகங்கள் வலுத்தன. மத்திய அரசுடன் கூட்டணியில் பிணக்கு ஏற்படக் காரணமே, இருதரப்பும் முறைகேடு எதையோ மறைக்க முயற்சி செய்வதுதான்! தங்களது ஊழல்களை மத்திய அரசு தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துவிடும் என்ற அச்சத்தால்தான், பேரம் படியாமல் நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேறினார் என்று கூறினார்கள் அரசியல் நோக்கர்கள். அதனால்தான் சிபிஐ.,யைக் கண்டு பயம் கொண்டு, அதற்கு தடை விதித்தார் என்றார்கள்.
அதனை பிரதமர் மோடி சூசகமாக தனது பேச்சில் தெரிவித்துள்ளார்.
மேலும், அண்மையில் சட்டீஸ்கர் அரசும் இதே போன்ற அறிவிப்பை வெளியிட்டது. ஏற்கெனவே, சாரதா சிட்பண்ட் உள்ளிட்ட மெகா ஊழல்களால் அவப்பெயரைப் பெற்று வரும் மேற்கு வங்க மம்தா அரசும் இந்த அச்சத்தாலேயே சிபிஐ.,க்கு தன் மாநிலத்தில் தடை விதித்தார் என்று கூறப்படும் நிலையில், பிரதமர் மோடியின் கேள்வி அதனை உறுதிப் படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது!