50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது துக்ளக் அரசியல் விமர்சன இதழ். இதன் 49ஆம் ஆண்டு விழா இன்று!
இந்த நிகழ்ச்சியில் தம்மால் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் பிரதமர் மோடி, துக்ளக் வாசகர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவரை பிரதமர் வேட்பாளராக முதன் முதலில் அறிவித்த பெருமை, துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமியைச் சாரும். துக்ளக் இதழின் வழியே, குஜராத்தில் மேற்கொள்ளப் பட்ட வளர்ச்சித் திட்டங்கள், அதன் பலன்கள் குறித்து எழுதி, மக்களுக்கு மோடி குறித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினார் சோ.
அதற்கு ஏற்ப, துக்ளக் இதழின் ஆண்டுவிழாக்களில் கலந்து கொண்டு, வாசகர்களுடன் உரையாடி, ஓர் அன்னியோன்னியத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் மோடி. சோ ராமஸ்வாமி உடல் நலமின்றி இருந்தபோது நேரில் வந்து பார்த்து நலம் விசாரித்துச் சென்றார்.
சோ ராமஸ்வாமி மரணம் அடைந்த பின்னர், துக்ளக் விழாவில் காணொளிக் காட்சி முறையில் உரையாடினார். இந்நிலையில், தாம் இன்றும் விழாவில் கலந்து கொள்ள நினைத்திருந்தும், வேறு சூழலில் அது இயலாமல் போய்விட்டது என்று கூறியுள்ளார்.
அவரது டிவிட்டர் பதிவில்… அச்சமின்றி தனித்துவத்துடன் செயல்பட்டு, துக்ளக் இதழை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற சோ.ராமசாமிக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துக்ளக் ஆண்டுவிழாவில் தம்மால் எதிர்பாராத சூழலில் கலந்து கொள்ள முடியவில்லை! ஆனால், ஒன்று வாசகர்கள் தங்களின் கேள்விகளை எனக்கு அனுபுங்கள். அவர்களுக்கான பதில்களை அடுத்த இதழில் பிரசுரித்துக்கலாம் என்று அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தியை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.